வெளிநாட்டில் படித்த டாக்டர்களில் 77% பேர் மருத்துவ கவுன்சிலின் தகுதித் தேர்வில் பெயில்!!
டெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து நாடு திரும்பிய மாணவர்களில் 77சதவீதம் பேர் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய கல்வி வாரியம்.
பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவம் பார்க்க இயலும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்...
இந்நிலையில், இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பெற்றவர்களின் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
பதில்...
அதற்கு தேசிய கல்வி வாரியம் அளித்த பதிலில், ''கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்களே இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் 2,851 மாணவர்களில் 2,192 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இது 76.8 சதவீத தேர்ச்சி ஆகும்.
4 % மட்டுமே...
கடந்த ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4 சதவீதமும், 11.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஜூன் மாதம் 5,967 மாணவர்கள் பங்கேற்ற தேர்வில் 282 மாணவர்களே வெற்றி பெற்றனர். இது 4 சதவீதம் ஆகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
77% பேர் தோல்வி...
இதன்மூலம், கடந்த 12 ஆண்டுகளில் வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியா திரும்பிய மாணவர்களில், இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தகுதி தேர்வுகளில் 77 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.