9 மாதங்களில் 78 "கேஸ்"... முசாபர்நகரில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
முசாபர்நகர்: முசாபர் நகரில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 78 வழக்குகள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சமீபகாலமாக உத்திரப்பிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் முசாபர் நகரில் கடந்த ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் சுமார் 78 பதிவு செய்யப்பட்டுள்ளது போலீஸ் பதிவு தகவலின் படி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். இந்த வழக்குகள் குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டம் 2012 மற்றும் பிற குற்ற வழக்குகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட 78 வழக்குகளில் 49 வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவை பாலியல் தொந்தரவு மற்றும் கடத்தல் தொடர்பானவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை சிறப்பு கோர்ட்டு கூடுதல் மாவட்ட நீதிபதி மன்யாங் சவுகான் விசாரித்து வருகிறார்.