பயங்கர ரவுடி விகாஷ் துபேவை பிடிக்க போன போது விபரீதம்.. 8 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற கிரிமினல்கள்
கான்பூர்: கான்பூரில் விகாஷ் துபே என்ற பயங்கரமான ரவுடியின் வீட்டிற்கு போலீஸ் ரெய்டு சென்ற போது, அந்த ரவுடியின் ஆட்கள் போலீசாரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் விகாஷ் துபே என்ற பிரபல ரவுடி மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இந்த ரவுடியை தேடி 15-16 பேர் கொண்ட போலீஸ் குழு அவரது வீட்டிற்கு சென்றது. அப்போது ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி நின்றிருந்த துபேவின் ஆட்கள் திடீரென ஜேசிபியை சாலையின் நடுவழியில் வைத்து மறித்ததுடன் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 4 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக போலீஸ் வருவதை முன்கூட்டியே குற்றவாளிகள் அறிந்திருந்ததுடன், எச்சரிக்கையாக இருந்துள்ளனர். போலீஸ் குழு வந்த போது அவர்களை திட்டமிட்டு சரமாரியாக தாக்கிவிட்டு அந்த குழு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
போலீசார் மீது தாக்குதல் நடந்த உடனேயே, எஸ்.எஸ்.பி தினேஷ்குமார், எஸ்.பி. (மேற்கு) டாக்டர் அனில் குமார் மற்றும் மேலும் மூன்று எஸ்.பிக்கள். தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். விகாஷ் துபே வசித்த பகுதி முழுவதும் உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரவு முழுவதும் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடினர்.
குற்றவாளிகள் 8 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.