அகமதாபாத் அருகே சொகுசு பேருந்து - டேங்கர் லாரி மோதல்: 8 பேர் பலி - 14 படுகாயம்
அகமதாபாத்: அகமதாபாத் அருகே சொகுசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். காயமடைந்த 14க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு மும்பையிலிருந்து சென்ற சொகுசுப் பேருந்து இன்ரு அதிகாலை 1.45 மணி அளவில் மும்பை-அகமதாபாத் ஹவேயில் டேங்கர் லாரி மீது மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தி்ல் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
பலியானவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதால், பலியானவர்கள் பற்றிய விவரங்கள் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன.
மேலும், விபத்தில் காயமடைந்த 14க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வருடம் மே மாதத்தில் 14 பேரை பலி கொண்டு, 40 பேரை படுகாயமேற்படுத்திய விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.