நெல்லூர் அருகே லாரி விபத்தில் சிக்கி 8 பக்தர்கள் பலி
ஹைதராபாத்: நெல்லூர் அருகே இன்று காலை லாரியில் சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரமாநிலம் கடப்பாவில் இருந்து ஒரு லாரியில் ஏராளமான பக்தர்கள் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை இந்த லாரி நெல்லூர் அருகே வந்த போது, எதிரே வந்த வாகனத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பக்தர்கள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினார்கள். போலீசாரும் அங்கு வந்தனர்.
இந்த விபத்தில் லாரியில் சென்ற 6 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றவர்களில் 2 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார்கள்.
மேலும் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனத்தில் மோதி கவிழ்ந்ததாக நெல்லூர் மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி. பாலவெங்கடேஸ்வரா கூறினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.