ஆக்சிஜனுக்கு பதில் மயக்கமருந்து... அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதையால் சிறுவன் பலி
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களின் அஜாக்கிரதையால் ஆக்சிஜனுக்கு பதில் மயக்க மருந்து வாயு கொடுக்கப்பட்டதில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 18 மாத குழந்தை ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மகாராஜா யெஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. சமீபத்தில் இங்கு ஆயுஷ் என்ற எட்டு வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
கடந்த வெள்ளியன்று அவனுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஆபரேஷன் தியேட்டரில் ஆக்சிஜனுக்கு பதிலாக மயக்க மருந்துவை குழாய் மூலம் அதிகளவு கொடுத்துள்ளனர். இதில் அவனது உடல் மிகவும் மோசமடைந்தது. பின், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அச்சிறுவன் உயிரிழந்தான்.
இதேபோல், தவறுதலாக மயக்க மருந்து அதிகளவில் அளிக்கப்பட்ட 18 மாதக் குழந்தை தொடர்ந்து அதே மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
பொதுவாக ஆபரேஷன் தியேட்டர்களில் குழப்பத்தைத் தவிர்க்க ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஒரு வித கலரில் ட்யூபும், மயக்க மருந்தான நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டருக்கு வேறு கலரில் ட்யூபும் பயன்படுத்தப் படுவது வழக்கம்.
ஆனால், அதனையும் சரிவர கவனிக்காமல் ஊழியர்கள் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த ஆபரேசன் தியேட்டருக்கு சீல் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர சதாரி என்ற காண்ட்ராக்டரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தான் சிலிண்டர்களில் தவறுதலாக ட்யூப்களை மாற்றி வைத்தவர் எனக் கூறப்படுகிறது.