12 தமிழர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை.. ஆந்திரா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சித்தூர்: செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 12 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக ஆந்திர வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தமிழர்களிடம் இருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள் மற்றும் 4 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்கள், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில், 12 தமிழர்கள் மீதான ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.