என்ன பண்ணச் சொல்றீங்க எஜமான்... இந்தியாவில் 80% என்ஜீனியர்கள் “ஏட்டுச் சுரைக்காய்”தான்!
டெல்லி: இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் மேலான பொறியியல் பட்டதாரிகள் திறமை குறைவால் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹரியானா மாநிலம், குர்கானை தலைமையிடமாகக் கொண்ட "ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்" என்ற தேசிய அளவிலான வேலைவாய்ப்பு மதிப்பாய்வு நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது.
நாட்டில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்தனர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சாயம் வெளுத்த பொறியியல் துறை:
ஒருகாலத்தில் "என் புள்ளை என்ஜீனியர்" என்று பெருமை பட வைத்த படிப்பு இன்றைய மாணவர்களுக்கு சாதாரண பட்டப்படிப்பு போல் மாறிவிட்டது. அதனால் பொறியியல் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, இளநிலை பட்டப்படிப்பு தொடர்புடைய கல்வித் திட்டங்களை வேலைவாய்ப்பு நோக்கிலானதாக உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இரண்டே நகரங்கள்தான்:
நம் நாட்டு நகரங்களைப் பொருத்தவரை வேலைவாய்ப்புகளைப் பெற்ற அதிக அளவிலான பொறியாளர்கள் உள்ள நகரம் டெல்லி ஆகும். அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு உள்ளது.
பொண்ணுங்க ஜாஸ்திதான்:
பாலின அடிப்படையில் பார்த்தால், ஆண், பெண் இரு பிரிவினரும் சரிசமமான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். எனினும், தகவல் தொழில்நுட்பம் இல்லாத துறைகளில் விற்பனைப் பொறியாளர்கள், இணையதளங்களில் கட்டுரைகள் எழுதுவது உள்ளிட்ட துறைகளில் ஆண்களை விட பெண்கள் சற்று அதிகமாகப் பணிபுரிகின்றனர்.
ஏட்டுச் சுரைக்காய் போதாது:
நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் அவர்கள் வேலைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை பெற்றிருப்பதில்லை என முதன்மையான நிறுவனங்கள் குறை கூறுகின்றன.
கல்விமுறை மாற வேண்டும்:
எனவே மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அடிப்படையில் கல்வியையும், பயிற்சி முறைகளையும் மேம்படுத்துவது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.