உ.பி.யில் அட்டகாசம்... பள்ளி, சுகாதார நிலையங்களில் 800 பசுக்கள் அடைப்பு... மாணவர்கள் தவிப்பு
Recommended Video
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பள்ளி மற்றும் சுகாதார மையங்களில் 800 பசுக்களை அடைத்து வைத்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், அங்குள்ள அலிகார் மாவட்டத்தில் சிலர், தெருக்களில் திரியும் பசுகளை பள்ளி மற்றும் சுகாதார மையங்களில் அடைத்து வைத்துள்ளனர்.
முதல்வர் உத்தரவு
சமீபத்தில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார் முதல்வர் யோகி ஆதித்யாநாத். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
750 கோசாலைகள்
அதோடு, கிராம பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக, 16 மாநகராட்சிகளுக்கு தலா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் கோசாலைகள் அமைக்கப்படுவதை கண்காணித்து, அதிகாரிகள் அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயிர்கள் நாசம்
அலிகார் மாவட்டத்தில் உள்ள கேசர் காங்கிரி, அட்ரவ்லி உட்பட சில கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை, பசுக்கள் மேய்ந்தன. இதனையடுத்து, அவற்றை கிராமத்தில் இருந்த பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொண்டு வந்து அடைத்தனர். மாடுகள் வயல்களை நாசப்படுத்துவதை தடுக்க இவ்வாறு செய்ததாக கூறினர்.
மாணவர்கள் தவிப்பு
பள்ளிகளில் பசுக்களை அடைத்து வைத்துள்ளதால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பள்ளிகளின் சுவர்கள் சேதமடைந்துள்ளன. பள்ளிகள் தொழுவம் போல் காட்சியளிக்கின்றன. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
|
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பசுக்கள் அடைத்து வைத்திருப்பதை அறிந்த வந்த மாவட்ட நிர்வாகத்தினர், வழக்கத்திற்கு மாறாக நடந்து வருவதாக தெரிவித்தனர். அரசியல் காரணத்திற்காக சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.