8வது கட்ட தேர்தல்: மே.வங்கம்- 62%; உ.பி- 36%, உத்தர்காண்ட்- 47%, பீகார்- 44% வாக்குகள் பதிவு
டெல்லி: லோக்சபா தேர்தலின் 8வது கட்டமாக 64 தொகுதிகளில் தற்போது அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 62%, உத்தர்காண்டில் 47%, உத்தரப்பிரதேசத்தில் 36%, பீகாரில் 44% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராகுல் போட்டியிடும் அமேதியில் 37% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
மொத்தம் 64 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 543 இடங்களை கொண்ட மக்களவைக்கு 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதுவரை 7 கட்டங்களாக 437 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 8வது கட்டமாக சீமாந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 7 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15 தொகுதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6 தொகுதிகள் என 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.
இந்த 64 தொகுதிகளில் மொத்தமுள்ள 1737 வேட்பாளர்களின் தலைவிதியை 18.47 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தொகுதியிலும், பா.ஜ.க பொதுச் செயலாளர் வருண் காந்தி அதே மாநிலத்தில் சுல்தான்பூர் தொகுதியிலும், கிரிக்கெட் வீரர் முகமது கைப் பூல்பூர தொகுதியிலும், காஷ்மீர் முன்னாள் முதலமைசரும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவருமான முசாபர் உசேன் பெய்க் பாரமுல்லா தொகுதியிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயாம்மா விசாகப்பட்டினம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனார்.
அதே போல பிகாரில் லோக் ஜன் சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஹாஜிபூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி சரண் தொகுதியிலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியும் போட்டியில் உள்ளனர்.
இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா மண்டி தொகுதியிலும்), முன்னாள் முதல்வர் பிரேம் குமாரின் மகனும் தற்போது எம்.பியுமான அனுராக் தாகூர் ஹமீர்பூரிலும் மற்றும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மனைவி ரேணுகா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் புரந்தேஸ்வரி, பல்லம் ராஜு ஆகியோரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இந்த 64 தொகுதிகளில் 2009ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்குப் பதிவுக்குப் பிறகு கடைசி கட்டமாக வரும் மே 12ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ஆந்திராவில் சட்டசபைத் தேர்தல்:
ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுடன், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பகல் 12 மணி வரை
இன்றைய தேர்தலில் பகல் வரை மேற்கு வங்கத்தில் 46%, சீமாந்திராவில் 33%, பீகாரில் 22% வாக்குகள் பதிவாகி இருந்தன. அசம்பாவிதங்கள் எதுவுமில்லாமல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
மே. வங்கத்தில் 62%
பகல் 2 மணிவரையில் மேற்கு வங்கத்தில் 62%, உத்தர்காண்டில் 47%, உத்தரப்பிரதேசத்தில் 36%, பீகாரில் 44% வாக்குகள் பதிவாகி உள்ளன.