ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 9 காஷ்மீர் சிறுவர்கள்... சிறப்பு முகாமில் அடைப்பு!!
டெல்லி: காஷ்மீரில் வாட்ஸ் அப் குரூப் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட 9 சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிறுவர்கள் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சிறுவர்களுக்கு 15 முதல் 17 வயது வரை ஆவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வட ஆப்பிரிக்காவை சேர்ந்தவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த குரூப்பானது அபுபக்கர் என்பவரால் இயக்கப்பட்டு வந்து உள்ளது. இந்த குரூப்பில் வெளிநாட்டவர்களும் பலர் இருந்துள்ளனர்.
வாட்ஸ்-அப் அட்மின்களான அபு பக்கர் மற்றும் அல் ஹயாத் இருவரும் ஐ.எஸ். தீவிரவாதத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் இந்த 9 சிறுவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
சிறுவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளத்தாக்கு பகுதியில் சிறுவர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு, கற்களை வீசுதல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடியினை காட்டுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்றுபேர் எல்லைத் தாண்டி பாகிஸ்தான் சென்று ஆயுதப்பயிற்சி பெறவும் திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தச் சிறுவர்கள் சிறப்பு முகாமிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையின் போது, தங்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு இல்லை என அந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக தீவிரவாத இயக்கத்திற்காக பணியாற்றியவர்களுடன் அச்சிறுவர்கள் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
உளவுத்துறை அதிகாரிகள் தகவலின்படி, ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன் கமாண்டர் பார்ஹான் வானியால் முன்வைக்கப்பட்ட காஷ்மீரில் கலிபா ஐடியாவால் அவர்கள் ஈர்க்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மட்டுமின்றி காஷ்மீர் இளைஞர்கள் பலர் வானியின் வீடியோக்கள் மற்றும் தகவல்களை தீவிரமாக பின்பற்றிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் இவ்வருடம் மட்டும் 79 இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைந்து உள்ளனர் என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.