உ.பி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து.. 9 பேர் சாவு.. 100 பேர் காயம்!
உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியின் உன்சஹார் என்ற இடத்தில் என்டிபிசி எனும் தேசிய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அனல் மின் நிலையம் 1988ஆம் ஆண்டு முதல் மின்உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகள் பழமையான இந்த அனல்மின் நிலையத்தில் முதல் 5 அலகுகள் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.
பாய்லர் வெடித்து விபத்து
6வது அலகில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 6 அலகில் உள்ள பாய்லர் இன்று திடீரென வெடித்து சிதறியது.
9 பேர் பலி, 100 பேர் காயம்
இதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்
அவர்களில் பலர் என்டிபிசி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலும் பலத்த காயங்களுடன் மோசமான நிலையில் உள்ள பலர் லக்னோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரூ. 2 லட்சம் இழப்பீடு
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.