பெங்களூரில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட தமிழக சிறுமியின் உடல் மடிவாளா ஏரியில் மீட்பு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சங்கர் என்பவர் மகள் கீதா லட்சுமி (9). சங்கரின் சகோதரி தனலட்சுமி வீடு பெங்களூர் பிலேஹள்ளி பகுதியில் உள்ளது. தனலட்சுமி பெங்களூரில் சமையல் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தசரா விடுமுறைக்காக கீதா தனது தாயாருடன் தனலட்சுமி வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 6ம்தேதி கீதா குடும்பத்தார் விருதாச்சலம் திரும்புவதாக இருந்தது. இந்நிலையில் அன்று இரவு 7.30 மணியளவில், பன்னேருகட்டா ரோடு பகுதியில், கீதாவை அவரது அத்தை தனலட்சுமி அழைத்துக் கொண்டு நடந்து சென்றார். அப்போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது.
நடைபாதையில் இருவரும் நடந்து சென்றபோது, நடைபாதையின் இடைவெளியில் சிறுமி சிக்கிக்கொண்டார். நடைபாதைக்கு கீழே சாக்கடை கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்ததால் அந்த நீரில் சிறுமி அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், பேரழிவு மீட்பு படையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரு நாட்கள் தேடிய நிலையில், சம்பவம் நடந்து இரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மடிவாளா ஏரியில் சிறுமியின் சடலம் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமி உயிரோடு கிடைப்பாள் என்று நம்பிய உறவினர்கள் அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
நடைபாதையை முழுமையாக மூடாமல் வைத்திருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்பதால் மாநகராட்சி மீது மக்களின் கோபப்பார்வை திரும்பியுள்ளது.