உள்ளாடைக்குள் புளூடூத் வைத்து லீக் ஆன மருத்துவ நுழைவுத் தேர்வு விடைகள்- 4 பேர் கைது
சண்டிகர்: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றபோது ஹரியானாவில் 90 விடைகள் வெளியானது. இதில் தற்போது பரபரப்பான பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது நவீன செல்போன் தொழில்நுட்பத்துடன் கூடிய உள்ளாடைகள் மற்றும் புளூடூத் மூலம் மாணவர்களுக்கு இந்த விடைகள் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு 2 பல் மருத்துவர்கள் மற்றும் ஒரு எம்.பி.பி.எஸ் மாணவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து புளூடூத் உள்ளாடைகள் மற்றும் 90 கேள்விகளுக்கான விடைகள் கைப்பற்றப்பட்டன. அவர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கும்பல் மூலம் குறைந்தது 9 மாணவர்கள் விடைகளை பெற்றிருக்கலாம் என்றும், இதற்காக 15 முதல் 20 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பதாகவும் போலீசார் விசாரணையில் கூறுகின்றனர்.
இந்த தொழில்நுட்ப உள்ளாடைகள் டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. மாணவர்களையும், அக்கடை உரிமையாளர்களையும் கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.