எல்லையில் ஒரே தொல்லை.. 7 மாதத்தில் 92 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்த ஆண்டில் மட்டும் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 92 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: எல்லையில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜூலை 2ம் தேதி வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினரின் முயற்சியால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
2012ம் ஆண்டில் 67 தீவிரவாதிகளும், 2013ல் 72 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அதாவது 2014 ம் ஆண்டில் 110 தீவிரவாதிகளும், 2015ல் 108 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று 2016ம் ஆண்டில் 150 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2017 ஜூலை 2 வரை 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சம் கூறியுள்ளது.
2016 ல் 371 முறை இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதம் வரை 124 முறை ஊடுருவ முயற்சி நடந்துள்ளது.
இதே போன்று ஜூலை 2 வரை 168 பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும், 142 கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. அதிகபட்சமாக 2016 ஜூலை மாதம் மட்டும் 820 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து, அழித்து வரும் அதே சமயத்தில் முக்கிய தீவிரவாதிகளையும் கண்டறிந்து, அவர்களை தேடும் பணியையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.