பொது பட்ஜெட்.. ரயில்வே பட்ஜெட்.. 92 ஆண்டு வழக்கம் ஏன் மாறுகிறது?
பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்று 92 ஆண்டு காலம் வழக்கத்தில் இருந்த முறை இந்த ஆண்டு முதல் மாற்றப்படுகிறது. ரயில்வேயின் வளர்ச்சிக்காகவே இப்படி செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தங்களுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியமாக இருக்கும் பல நடைமுறைகளை மாற்றி வருகிறது. அதுபோன்று பொது பட்ஜெட் என்றும் ரயில்வே பட்ஜெட் என்றும் தனித்தனியாக இருந்த இரண்டு பட்ஜெட்டுகளையும் இணைத்து முதல்முறையாக இந்த ஆண்டு ஒரே பட்ஜெட்டாக மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்க காலத்தில் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்று தனித்தனியாக பிரிக்கப்படாமல் இரண்டும் இணைக்கப்பட்டே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அதில் இருக்கும் குறைகளை களைவதற்காக வில்லியம் அக்வோர்த் கமிட்டி என்ற ஒரு குழுவை ஆங்கில அரசு உருவாக்கியது.
இந்தக் கமிட்டி 1921ம் ஆண்டு ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய ஆங்கில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், 1924ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் தனியாக பிரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பழக்கமே கடந்த ஆண்டு வரை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது.
ஆனால், தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு, 92 ஆண்டு கால வழக்கத்தை தற்போது மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அப்போது, ரயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டையும் இணைப்பதன் மூலம் ரயில்வே துறை வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டது.
அந்த அடிப்படையில் 2017-18 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வரும் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த பட்ஜெட் பொது பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்த பட்ஜெட்டாக இருக்கும். இதன் மூலம் 92 ஆண்டு கால வழக்கம் முடிவிற்கு வர உள்ளது.