10 மாவட்டங்கள், 96 கிராமங்கள், 8 வனப்பகுதிகள் யாருக்கு சொந்தம்? 4 மாநிலங்களுடன் மல்லுக்கட்டும் ஒடிஷா
96 கிராமங்களுக்காக 4 மாநிலங்களுடன் போராடுகிறது ஒடிஷா.
புவனேஸ்வர்: ஒடிஷாவின் 10 மாவட்டங்களின் 96 கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் ஆந்திரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுடன் அம்மாநில அரசு மல்லுக்கட்டி வருகிறது.
ஒடிஷாவின் கோடியா பகுதிக்கு ஆந்திரா மாநில அரசும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கியுள்ளது. இப்பகுதி மக்கள் இரு மாநிலங்களிலும் வாக்களித்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணையில், இந்த பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாகவே நீடிக்க வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஒடிஷா சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் மகேஸ்வர் மொகந்தி அளித்த பதில்:
ஒடிஷாவின் 10 மாவட்டங்களில் 96 கிராமங்கள் எல்லை சர்ச்சையில் உள்ளன. கஞ்சம் மாவட்டத்தில் 21, கஜபதியில் 16, ராயகடாவில் 5 கிராமங்கள் குறித்து ஆந்திராவுடன் பிரச்சனை உள்ளது. பாலேஸ்வரில் 6, மயூர்பஞ்சில் 8 கிராமங்கல் குறித்து மேற்கு வங்கத்துடன் மோதல் இருக்கிறது.
அதேபோல் மயூர்பஞ்சின் 2, கியோஞ்சரில் 5, சுந்தர்காரில் 6 கிராமங்கள் தொடர்பாக ஜார்க்கண்ட், நப்ரங்பூரில் 4, ஜர்சிகுடாவில் ஒரு கிராமம் குறித்து சத்தீஸ்கருடன் பிரச்சனை உள்ளது.
மேலும் 7 ஆறுகளின் கால்வாய்கள், 8 வனப்பகுதிகளும் மாநிலங்களிடையேயான பிரச்சனைக்குரியவையாக உள்ளன. இவ்வாறு மகேஸ்வர் மொகந்தி தெரிவித்தார்.