கேரளாவை எந்த மாநிலமும் மிஞ்ச முடியாது... 2017-ல் மட்டும் 97 முறை பந்த்.. ரூ.900 கோடி இழப்பு
இந்திய அளவில் பந்த் போராட்டம் நடத்துவதில் கேரளாவை எந்த மாநிலமும் மிஞ்சமுடியாது. நடப்பாண்டில் இதுவரை 97 முறை பந்த் நடந்துள்ளது. அதனால் பொருளாதார இழப்பும் அதிக அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரி
திருவனந்தபுரம்: எதற்கெடுத்தாலும் பந்த் போராட்டங்கள் நடக்கும் மாநிலம் கேரளா. நடப்பாண்டில் இதுவரை 97 முறை பந்த் போராட்டங்கள் நடந்துள்ளது என்கிறது புள்ளி விவரம். இதனால் ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் மாநில முன்னேற்றம் பெரிய அளவுக்கு தடைபட்டுள்ளது கூறப்படுகிறது.
எந்த விவகாரமாக இருந்தாலும் முதலில் கேரளாவில் நடப்பது பந்த் போராட்டம் மட்டுமே. மாநில அளவிலும், மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் பந்த் போராட்டம் அறிவித்து எதிர்ப்புக் காட்டுவது கேரளா மக்களின் கூடப்பிறந்த குணம்.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த 97 பந்த் போராட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் 'சங் பரிவார்' அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளன. அதே போல 10க்கும் மேற்பட்ட பந்த் போராட்டங்கள் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் பாஜக அலுவலகம் கோழிக்கோட்டில் சேதப்படுத்தப்பட்டது. அதனைக் கண்டித்து பாஜக பந்த் அழைப்பு விடுத்திருந்தது. அதே போல சிபிஎம் கட்சியும் பந்த் அழைப்பு கொடுத்திருந்தது. ஆனால், அடுத்த நாளும் பாஜக பந்த் நடத்தி எதிர்ப்பை காட்டியது.
இன்றும் போராட்டம்
இன்று திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து கேரளா முழுவதும் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
முடங்கும் வாழ்க்கை
இப்படியான பந்த் போராட்டங்களால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது ஆனால், பந்த் நடத்தும் கட்சிகளின் தலைவர்கள், எங்கள் போராட்டம் எங்கள் கோரிக்கைகளை வென்று கொடுக்கிறது என்கின்றனர்.
பந்த் என்றாலே பயம்
கோழிக்கோடு மாவட்ட வணிகர்களோ, "விழாக்கால நேரங்களில் பந்த் போராட்டம் நடத்துவதால், போக்குவரத்து முடங்கி, வணிகம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. பந்த் நடத்துபவர்களுக்கு பயந்தே கடைகளை அடைத்துவிடுகிறோம்" என்று கவலை தெரிவிக்கிறார்கள். இது குறித்து கருத்துத் தெரிவித்த கேரள வணிகர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் சேதுமாதவன், " பந்த் போராட்டத்தால் நாங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளோம். ஒவ்வொரு முறையும் நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டே கடைகளை அடைக்கும் நிலைக்குச் செல்கிறோம்" என்றார்.
ரூ.900 கோடி வருமான இழப்பு
பந்த் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 'பந்த் நடக்கும் நாளில் சுமார் 900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது கவனிக்கத்தக்க விஷயம். பந்த காரணமாக கேரளாவின் முக்கிய வருமானம் தரும் சுற்றுலா துறை கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அண்மையில் மூணாறு வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பந்த் காரணமாக நாள் முழுவதும் உணவில்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.
'தோழர்களால்' தொழிலாளர்களுக்கு நெருக்கடி
இது தொடர்பாக பேசிய கேரளா பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், கேரள தொழிலாளர்கள் ஆளும் சிபிஎம் அரசாலும் , போலீசாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களின் வீடுகளில் இருக்கும்போது கூட பாதுகாப்பாக இருப்பதை உணர்வதில்லை. அந்த அளவுக்கு நெருக்கடிகள் நிலவுகின்றன. கம்யூனிஸ்ட் தொண்டர்கள் எப்போது வன்முறையைக் கைவிடுகிறார்களோ அன்றுதான் மாநிலத்தில் அமைதி நிலவும்" என்கிறார். இத்தகைய பந்த் கலாசாரம் என்று முடிவுக்கு வரும்? என்பதுதான் கேரளா மக்களின் எதிர்பார்ப்பாகும்.