14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமவெறியர்கள்.. கடித்து குதறி காப்பாற்றிய 'செல்ல' நாய்!
மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேரை சிறுமியின் வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது.
சாகர்: மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேரை சிறுமியின் வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. என்னதான் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் பாலியல் கொடுமைகள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமியை 2 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைக்கோல் எடுக்க..
மத்திய பிரதேச மாநிலம் சாகர் அருகே கரீலா கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமி கொசுக்களை விரட்ட புகை மூட்டம் போடுவதற்காக வைக்கோல் கொண்டு வர நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார்.
கடத்தி பலாத்காரம்
அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்த ஐஷு அஹிர்வார் என்ற 39 வயது நபர் மற்றும் 24 வயதான புனித் அஹிர்வார் ஆகிய 2 பேரும் கத்தி முனையில் சிறுமியை தடுத்து நிறுத்தி மிரட்டி உள்ளனர். பின்னர் சிறுமியை கடத்தி ஆளில்லாத குடிசை ஒன்றிற்குள் கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளனர்
கடித்து குதறிய நாய்
அப்போது சிறுமி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட சிறுமியின் வளர்ப்பு நாய் அங்கு ஓடியுள்ளது. ஐஷுவை அது கடித்து குதறியது. இதில் வலி தாங்க முடியாமல் கத்திய ஐஷு நாயை கத்தியால் தாக்கி உள்ளான். ஆனால் தொடர்ச்சியாக நாய் குரைத்து கொண்டே இருந்தது.
குடிசைக்கு வந்த மக்கள்
இந்நிலையில், அந்த கயவர்களின் பிடியில் இருந்து சிறுமி தப்பிவிட்டார். சிறுமியின் சத்தம் மற்றும் தொடர்ச்சியாக நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்தவர்கள் குடிசையை நோக்கி ஓடியுள்ளனர். இதனால் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நாய்க்கு பாராட்டு
இதுபற்றி சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். தனக்கு சோறு போட்டு வளர்த்தவருக்கு பிரச்சனை என்றதும் அவர்களை கடித்து குதறி கத்தி ஊரை கூட்டிய நாயை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.