மகனின் முதல் பிறந்தநாளில் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை.. கலப்பு திருமணம் செய்ததால் ஆத்திரம்!
கலப்பு திருமணம் செய்த நபர் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் கலப்பு திருமணம் செய்த நபர் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரைச் சேர்ந்தவர் நஸீம் அகமது. இவர் பிங்கி குமாரி என்ற இந்து பெண் ஒருவரை காதலித்தார்.
அவர்களின் காதலுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் குடியேறினர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கேக் வாங்கிவிட்டு வரும்போது..
இந்நிலையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை தனது வீட்டில் கொண்டாட விரும்பிய நஸீம் முசாஃபர் நகருக்கு வந்தார். குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு நஸீம் கேக் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்
அப்போது அவரது வாகனத்தை வழிமறித்த மர்மநபர்கள் 3 பேர் நஸீம் மார்பில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நஸீம் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வந்த வேகத்தில் அவரை கொன்றுவிட்டு மர்மநபர்கள் தப்பியோடிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறியுள்ளனர்.
போலீஸார் வழக்குப்பதிவு
இதுகுறித்து நஸீமின் உறவினர்கள் அளித்த புகாரில் பிங்கி குமாரியின் தந்தை ராஜேஷ் குமார், பிங்கியின் சகோதரர் மற்றும் இருவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மதக்கலவரம் ஆபத்து
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த கொலையால் அப்பகுதியில் மதக்கலவரம் வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.