புனேவில் பணியில் இருந்த வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பலி!
புனேவில் ஸ்டேட் வங்கி ஊழியர் ஒருவர் பணியின்போது மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புனே: புனே ஸ்டேட் வங்கி ஊழியர் பணி நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பலியான அந்த ஊழியர் துக்காராம் தன்பூரே என்பது தெரியவந்துள்ளது. அவர் புனேவில் உள்ள ராஜ்குருநாகர் ஸ்டேட் வங்கி கிளையில் தபால் எடுத்துச் செல்லும் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகலில் வங்கி கிளையில் அறை ஒன்றில் அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவினை இழந்தார்.
அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு வங்கி ஊழியர்கள் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளில் அதனை மாற்ற மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறித்து அந்த வங்கி மேலாளரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் காலை முதல் அதிக கூட்டம் இருந்ததாக குறிப்பிட்டார். இருப்பினும், கூட்டத்தை நிர்வகிப்பதில் எந்த சிரமமும் இல்லை என்றும் அவர் கூறினார்.