கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூர்ண குணமடைந்த வயதான தம்பதி.. கேரளா அரசு உற்சாகம்
கோட்டயம்: கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களும் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 91 வயதாகும் தாமஸ், 88வயது மரியம்மா. இவர்களது மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் இத்தாலியில் வசிக்கிறார்கள்.
இவர்கள் அண்மையில் கொரோனா வைரஸ் பிரச்னையால் நாடு திரும்பினர். இந்நிலையில் மகனுடன்இருந்த காரணத்தால் வயதான தம்பதிகளான தாமஸ் மற்றும் மரியம்மா தம்பதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
டெல்லியில் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலி
கோட்டயம் மருத்துவமனை
இந்நிலையில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது கடந்த மார்ச் 8ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் உடனடியாக பத்தினம்திட்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மூச்சுவிடுவதில் சிரமம்
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 91 வயதாகும் தாமஸுக்கு அடிக்கடி மாரடைப்பு வந்திருக்கிறது. இதேபோல் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் முன்பே சில உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் வயதான தம்பதிகள் இருவரும் பூரண குணமடைந்தனர் .
நாங்கள் வெல்வோம்
இந்த தகவலை கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். "இது மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் மற்றும் கேரள பொது சுகாதார அமைப்பின் வலிமைக்கு ஒரு சான்றாகும். நாங்கள் வெல்வோம்," என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
1251 பேருக்கு பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 32 ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று நிலவரப்படி மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1,251 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 1117 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள மாநிலத்தில் 202 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்றுவதாவும் இதை நிச்சயம் அரசு சமாளிக்கும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.