வீட்டில் நுழைந்த முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடித்து அநாகரீகமாக நடந்த பஞ். தலைவர்!
பீகாரில் வீட்டில் நுழைந்ததற்காக முடி திருத்தும் தொழிலாளியை பஞ்சாயத்து தலைவர் பெண்களை விட்டு செருப்பால் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பீகாரில் வீட்டில் நுழைந்ததற்காக முடி திருத்தும் தொழிலாளியை பஞ்சாயத்து தலைவர் பெண்களை விட்டு செருப்பால் அடிக்க வைத்து எச்சிலை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ளிட்ட வடமாநில கிராம பஞ்சாயத்துகள் தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு நூதன தண்டனைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக காதல் திருமணம் செய்பவர்கள், கள்ளக்காதலில் ஈடுபடுபவர்கள், ஜாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டி வைத்து கல்லால் அடிப்பது போன்ற நூதன தண்டனைகளை வழங்கப்படுவது வழக்கம்.
தவறே செய்யாதவர்களையும் ஆதிக்க சமுதாயத்தில் இருப்பவர்கள் தண்டிக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகும். இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தன் வீட்டில் நுழைந்ததற்காக ஒரு முடிதிருத்தும் தொழிலாளியை கொடூரமாக தண்டித்துள்ளார்.
முதல்வரின் சொந்த ஊர்
பீஹார் முதல்வர் நிதிஷின் சொந்த ஊரான பீஹார்ஷரீப் மாவட்டத்தில் உள்ளது அஜய்புர். இதன் பஞ்சாயத்து தலைவராக சுரேந்திரா என்பவர் உள்ளார்.
தெரியாமல் நுழைந்த தொழிலாளி
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதான மகேஷ் தாக்கூர் என்ற முடி திருத்தும் தொழிலாளி பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆண்கள் யாருமில்லை
அப்போது, வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என தெரிகிறது.பெண்கள் மட்டும் இருந்துள்ளனர். இதனையறியாத மகேஷ் தாக்கூர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
செருப்பால் அடித்து எச்சிலை..
இதனையறிந்த சுரேந்திரா மறுநாள் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார். அப்போது பெண்கள் அனைவரும் தங்களின் செருப்பால் முடி திருத்தும் தொழிலாளி மகேஷ் தாக்கூரை அடிக்க வேண்டும் என்றும், எச்சிலை துப்பி அதை மகேஷ் தாக்கூர் மீண்டும் நக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
கொடூர தண்டனை
பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்புக்கு கட்டுப்பட்ட கிராம மக்கள் மகேஷ் தாக்கூரை செருப்பால் அடித்துள்ளனர். இதேபோல் எச்சிலையும் நக்க வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவலறிந்த போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கதவை தட்டாமல் அவர் வீட்டிற்குள் நுழைந்தற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.