நாய்களுக்கு சப்பாத்தி.. எனக்கு பழைய சோறா? செத்துப்போ.. சோறு போட்டவரை குத்தி கொன்ற பிச்சைக்காரர்!
மும்பையில் நாய்களுக்கு சப்பாத்தி போட்டுவிட்டு தனக்கு பழைய சோறு போட்ட நபரை பிச்சைக்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மும்பை: நாய்களுக்கு சப்பாத்தி போட்டுவிட்டு தனக்கு பழைய சோறு போட்ட நபரை பிச்சைக்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் சார்யு பிரசாத். 52 வயதான இவர் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது வீட்டுக்கு தினசரி அந்த பகுதியை சேர்ந்த தன்குமார் என்ற 35 வயதான பிச்சைக்காரர் சாப்பாடு கேட்டு வருவது வழக்கம்.
நாய்களுக்கு சப்பாத்தி
அவருக்கு சார்யு பிரசாத் இதுவரை பழைய சோறுதான் போட்டு வந்துள்ளார். அதேநேரம் அந்த தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு சார்யு பிரசாத் சப்பாத்தி போட்டு வந்தார்.
பிச்சைக்காரருக்கு பழையசோறு
இந்நிலையில் சார்யு பிரசாத் வீட்டுக்கு நேற்று முன்தினம் பிச்சைக்காரர் தன்குமார் வழக்கம்போல சென்றுள்ளார். அப்போது சார்யு பிரசாத் எப்போதும் போல் வீட்டில் இருந்த பழைய உணவை அவருக்கு கொடுத்துவிட்டு, தெருநாய்களுக்கு சப்பாத்தி போட்டார்.
கத்தியால் குத்திய பிச்சைக்காரர்
இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரர் தன்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சார்யு பிரசாத்தை சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் பிச்சைக்காரர் தன்குமார்.
சம்பவ இடத்திலேயே பலி
இதில் வயிறு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் அடைந்த சார்யு பிரசாத் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சற்றுநேரத்திலேயே சார்யு பிரசாத் துடிதுடித்து இறந்து போனார்.
2 மணிநேரத்தில் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிச்சைக்காரர் தன்குமாரை 2 மணி நேரத்தில் கைது செய்தனர். பழைய சோறு போட்டதால் ஆத்திரமடைந்த பிச்சைக்காரர் ஒருவரை குத்தி கொலை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.