நாம் பேசும் மொழியை கண்டுபிடித்துவிடும்... பெங்களூரில் 11 மொழிகள் பேசும் 'ரோபோ' கண்டுபிடிப்பு!
இந்திய மக்களின் வசதிக்காக இந்திய மொழிகளை பேசும் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் ரோபோட் ஒன்று பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: இந்திய மக்களின் வசதிக்காக இந்திய மொழிகளை பேசும் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் ரோபோட் ஒன்று பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பை பெங்களூரில் இருக்கும் மிகச் சிறிய தொழில் முனைவோர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்தியாவில் உள்ள அனைவரிடமும் எளிதாக பேச முடியும் என கூறப்பட்டுள்ளது. நாம் பேசும் மொழியை புரிந்து கொண்டு இது மற்றவருக்கு மொழிபெயர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட லிவ். ஏ.ஐ என்ற நிறுவனம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இது 10 மொழிகளை பேசும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் தொழில்நுட்பம்
உலகின் எதிர்காலம் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் கைகளில்தான் இருக்கிறது என்று அறிவியலாளர்களால் சொல்லப்படுவது வழக்கம். தானாக எந்திரமே சிந்திக்கும் திறனுக்கு பெயர்தான் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட். இந்த தொழில்நுட்ப்பத்தை வைத்து நிறைய வித்தியாசமான செயல்களை செய்ய முடியும். ஆப்பிள் போனில் இருக்கும் 'சிறி' மென்பொருள், விண்டோசில் இருக்கும் 'கார்டோனா' மென்பொருள் என எல்லாம் ஆர்டிபிசியல் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கப்பட்டதுதான். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோட் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் தொழில்நுட்பத்தின் குழந்தைதான்.
பெங்களூர் ஸ்டார்ட் அப் நிறுவனம்
ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் தொழில்நுட்பத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் சோதித்து வருகின்றது. இதில் நிறைய ஆய்வுகள் நடத்தி புதிய புதிய கண்டுபிடிப்புகளை இதை கொண்டு நிகழ்த்தி வருகின்றது. உலகின் பல நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் இந்தியாவில் மட்டும் அதிக அளவில் இதில் யாரும் ஆராய்ச்சி நிகழ்த்தவில்லை. இந்த நிலையில் இந்த தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக 'லிவ். ஏ.ஐ' என்ற நிறுவனம் பெங்களூரில் தொடங்கப்பட்டது.
லிவ். ஏ.ஐ நிறுவனத்தின் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் இந்த நிறுவனம் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் தொழில்நுட்பத்தில் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வந்தது. உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதை எப்படி பயன்படுத்துகிறது என்ற ஆராய்ச்சி நடத்தியது. தற்போது இந்தியாவில் இருக்கும் மொழிப்பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது இந்த நிறுவனம். அதன்படி இந்தியாவின் 10 முக்கிய மொழிகளை பேசும் வகையில் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைவருடன் எளிதாக உரையாட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடு எப்படி
இந்த தொழில்நுட்பம் கூகுளை விட மிகவும் எளிமையானது என கூறப்பட்டுள்ளது. அதன்படி நாம் பேசும் மொழியை அதுவே கண்டுபிடித்து நாம் விரும்பிய மொழியில் மாற்றி கொடுக்கும். மிகவும் துல்லியமான முறையில் இந்த தொழிநுட்பம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுபோத் குமார், சஞ்சீவி குமார், கிஷோர் முந்த்ரா ஆகியோர் இணைந்து இந்த தொழிநுட்பத்தை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.