120 சாட்டிலைட்.. ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்க முடிவு.. பெங்களூர் நிறுவனத்தின் மாஸ் பிளான்!
ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்கப்படும் வசதியை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியா முழுக்க செயல்படுத்த இருக்கிறது.
பெங்களூர்: ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்கப்படும் வசதியை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியா முழுக்க செயல்படுத்த இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த ஆஸ்ட்ரோம் என்ற நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அடுத்த வருடம் விண்வெளிக்கு சில சாட்டிலைட்டுகளை அனுப்ப உள்ளது.
இதன் மூலம் ஆகாயத்தில் இருந்து நேரடியாக நமக்கு இணைய வசதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா முழுக்க இதன் மூலம் எளிதாக இணைக்கப்படும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.
இப்போது எப்படி
இப்போதும் நாம் ஆகாயம் மூலமே இணைய வசதியை பெறுகிறோம். ஆனால் ஆகாயத்தில் உள்ள சாட்டிலைட் மூலம் சிக்னல்கள் குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்களில் டவர்களுக்கு அனுப்பப்பட்டு பின் நம்முடைய மொபைல்களுக்கு வரும். இல்லையென்றால் பிராட்பேண்ட் வசதி மூலம் வீட்டு கணினிகளுக்கு வயர்கள் மூலம் இணைய வசதி அளிக்கப்படுகிறது.
என்ன வசதி
இந்த நிலையில் நேரடியாக ஆகாயத்தில் இருந்து நம்முடைய மொபைல்களுக்கு இணைய வசதி அளித்தால் எப்படி இருக்கும். அதாவது வீட்டில் டிடிஎச் வைத்து இருப்பது போல. கேபிள் நிறுவனங்களை நம்பாமல் வீட்டில் நாமே ஆன்டெனா வைத்து இருக்கிறோம். அதை வைத்து நமக்கு சாட்டிலைட் மூலம் நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கிடைக்கிறது. இதேபோல் போன் பயன்படுத்துவது நடந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் செய்ய போகிறார்கள்.
எப்படி இயங்கும்
இந்த ஆஸ்ட்ரோம் நிறுவனம் மூலம் நேரடியாக ஆகாயத்தில் இருந்து நம்முடைய போன்களுக்கு இணைய வசதி அளிக்கப்படும். அதாவது இடையில் எந்த நிறுவனத்தின் இடையூறும் இல்லாமல், நேரடியாக வலுவான சிக்னல்கள் நமக்கு அளிக்கப்படும். இதன் மூலம் இணையம் மிகவும் வேகமாக இருக்கும். வீட்டில் இந்த சிக்னல்களை பெற ஆன்டெனா ஒன்று வைத்து வீட்டில் உள்ள வைஃபை உள்ள பொருட்களையும் இணையத்தில் இணைத்துக் கொள்ள முடியும். அதாவது அளவில்லாத இன்டெர்நெட்!
என்ன செய்ய போகிறார்கள்
இந்த வசதியை உருவாக்கி கொடுக்க அதிக நாட்கள் எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்று ஆஸ்ட்ரோம் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆம், அடுத்த வருடம் ஜூலை வரை காத்திருந்தால் போதும். அதற்குள் 25 சாட்டிலைட்டுகளை அனுப்ப இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. 2020க்குள் 125 சாட்டிலைட்டுகளை அனுப்ப இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுக்க ஒரே வேகத்தில் இணையம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்படும்.
மாற்றம் ஏற்படும்
இதனால் தற்போது இந்திய இணைய உலகத்தில் ஜியோ ஏற்படுத்தி இருக்கும் மாற்றமே மொத்தமாக காலி ஆகி விடும். ஆம் இப்போதே நமக்கு குறைந்த விலையில் அதிக அளவில் இணையம் வழங்கப்படுகிறது. ஜியோ வந்த பின் நிறைய சலுகைகள் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆஸ்ட்ரோம் நிறுவனம் வந்த பின் அதைவிட அதிக சலுகையும், சுதந்திரமும், வேகமும் கிடைக்கும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
இதை எல்லாம் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று நினைத்தால், நீங்கள் சரியாக கணித்து விட்டீர்கள். அமெரிக்காவின் பிரபல விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இதேபோல ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். அதாவது உலகம் மொத்தமும் ஒரே வேகத்தில் ஒரே மாதிரி இணையம் வழங்க பல நூறு சாட்டிலைட்டுகளை அனுப்ப உள்ளதாக அவர் கூறினார். அதில் இந்தியாவும் அடக்கம். இந்த இரண்டில் ஏதோ திட்டம் விரைவில் செயலுக்கு வரும் என்று கூறலாம்.