வடமாநிலங்களில் தீவிரமாகும் எஸ்சி/எஸ்டி சட்டத்திற்கு எதிரான போராட்டம்.. மத்திய அரசு அதிர்ச்சி!
பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதாவிற்கு எதிராக வடஇந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளது.
டெல்லி: பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதாவிற்கு எதிராக வடஇந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க பட்டியலினத்தை சேராத மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில வாரம் முன் பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்தது. இந்த மாற்றத்திற்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இப்போது இதே சட்டத்தால் மற்ற ஜாதியினர் போராடி வருகிறார்கள்.
முன்பு இந்த சட்டத்தை நீதிமன்றம் நீர்க்க செய்கிறது என்று பட்டியலின மக்கள் போராடினார்கள். இப்போது மத்திய அரசு இதை வலுவாக மாற்ற முயற்சி செய்கிறது என்று மற்ற சாதியினரால் போராட்டம் நடத்தப்படுகிறது.
முதலில் மிகவும் சிறிய அளவு தொடங்கிய போராட்டம் இப்போது பல மாநிலங்களில் பரவி இருக்கிறது. இதனால் வட இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
பிரச்சனையின் தொடக்கம் எங்கே
சரியாக கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான ஒன்றை தீர்ப்பு வழங்கியது. பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது. கைது செய்ய வேண்டும் என்றால் அதிக கிரேட் கொண்ட அதிகாரிகள் அனுமதி கொடுக்க வேண்டும்.இதில் அரசு ஊழியர்கள் எளிதாக ஜாமீன், முன்ஜாமீன் பெறவும் வழிவகை செய்யப்பட்டது. அரசு ஊழியர் அல்லாத பொதுமக்களை கைது செய்யவும் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
பெரிய போராட்டம்
பட்டியலின மக்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தின் பேரில் இந்த சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த மாறுதல் பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் குறிக்கோளை கேள்விக்குறியாக்குவதாக கூறி பட்டியலின மக்கள் போராட தொடங்கினார்கள். இந்தியா முழுக்க பந்த் நடந்தது.ராஜஸ்தான், டெல்லி, குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடந்தது.
முயற்சி செய்தது
இதனால் மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி பட்டியலின மக்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தின் பேரில் இந்த சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது தவறானது அதனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்தை திரும்ப பெற கோரியது. ஆனால் உச்ச நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு என்ன செய்தது
இந்த நிலையில்தான் பட்டியலின மக்களை சமாதானப்படுத்தும் வகையில், மத்திய அரசு சட்ட திருத்த ஒன்றை கொண்டு வர உள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த சட்டத்தை, சக்தி இழக்க வைக்கும் வகையில் சில திருத்தங்களை கொண்டு வர முடிவெடுத்தது. இதற்காக மசோதா ஒன்றையும் தாக்கல் செய்ய உள்ளது.
பிரச்சனை
ஆனால், இதற்கு மற்ற இடைநிலை சாதியினரும், பட்டியலினத்தை சேராத சாதியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பாஜக கட்சியில் உள்ள தலித் அல்லாத ஜாதியினர் எல்லோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால்,பாஜக கட்சி இப்போது இந்த பக்கமும் செல்ல முடியாமல், அந்த பக்கமும் செல்ல முடியாமல் பெரிய சிக்கலில் மாற்றியுள்ளது.
மீண்டும் போராட்டம்
இதன் காரணமாகவே தற்போது பல வட மாநிலங்களில் பட்டியலின மக்கள் அறிவித்தது போலவே மற்ற ஜாதியினர் மூலம் தற்போது பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பந்த் என்று அழைக்கப்பட்டாலும், வட இந்தியாவில் 11 மாநிலங்களில் மட்டுமே பந்த நடக்கிறது. குஜராத் , ராஜஸ்தான் , மத்திய பிரதேஷ், ஒடிசா, உத்தர பிரதேஷ், ஹரியானா உள்ளிட்ட பாஜகவின் பலமான இடங்களில் எல்லாம் பாஜகவிற்கு எதிராகவே போராட்டம் நடக்கிறது.