‘சந்தர்ப்பவாதி’ பட்டத்துடன் போஸ்டரில் போட்டோ... கெஜ்ரிவாலுக்கு கிரண்பேடி நோட்டீஸ்
டெல்லி: அனுமதி பெறாமல் தனது புகைப்படத்தை ஆம் ஆத்மி தேர்தல் விளம்பர போஸ்டர்களில் பயன்படுத்தியது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பா.ஜ.க.வின் டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
அடுத்த மாதம் 7ம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், பா.ஜ.க, மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்குகிறார். இதேபோல், பாஜக சார்பில் கிரண்பேடி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் இருவருமே காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் ஆட்டோக்களில் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘டெல்லி மக்கள் யாரை முதல்வராக தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?' என்ற வாசகத்துடன், கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், கெஜ்ரிவால் படத்திற்கு கீழ், நேர்மையானவர் என்றும், கிரண்பேடி படத்திற்கு கீழ், சந்தர்ப்பவாதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் விவகாரம், டெல்லியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. எனவே, அனுமதியின்றி தனது புகைப்படத்தை போஸ்டரில் பயன் படுத்தியதாக கெஜ்ரிவாலுக்கு கிரண்பேடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கு முன்னரும், பா.ஜ.க., கட்சியை சேர்ந்த ஜகதீஷ் முகி படத்தை, அவரின் அனுமதியின்றி, பயன்படுத்திய குற்றச்சாட்டில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.