மின்னலுக்கே பயந்தா எப்படி? எனக்கு நீ வேண்டாம்.. மணமகனை மேடையிலேயே உதறி தள்ளிய மணமகள்!
பீகாரில் மின்னலைப் பார்த்து பயந்த மணமகனை மணமகள் மேடையிலேயே உதறி தள்ளிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பீகாரில் மின்னலைப் பார்த்து பயந்த மணமகனை மணமகள் மேடையிலேயே உதறி தள்ளிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் சிறு சிறு காரணங்களுக்கு கூட மணப்பெண்கள் மண மேடையிலேயே திருமணத்தை நிறுத்துவது ஒன்றும் புதிதல்ல.
வீட்டில் டாய்லெட் இல்லை, வரதட்சனை அதிகம் கேட்பது, மணமகனுக்கு குடிப்பழக்கம் இதுபோன்ற காரணங்களுக்கு எல்லாம் பெண்கள் சட்டென திருமணத்தை நிறுத்திவிட்டு சரசரவென மணமேடையைவிட்டு இறங்குவது வாடிக்கையான ஒன்றுதான்.
உதறி தள்ளிய மணமகள்
இந்நிலையில் பீகாரில் மணப்பெண் ஒருவர் வித்தியாசமான ஒரு காரணத்திற்காக மணமகனை உதறி தள்ளிவிட்டு விர்ரென மணமேடையைவிட்டு இறங்கி சென்றுள்ளார்.
திருமண ஏற்பாடுகள்
அதாவது பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நேற்று ஒரு திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான பணிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென வந்த மின்னல்
மணமேடையில் திருமணத்திற்கு முந்திய சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென மின்னல்வெட்டியது.
எப்படி திருமணம் செய்வது?
மின்னலை கண்டு பயந்துபோன மணமகன் வித்தியாசமாக நடந்துகொண்டார். அவரது வித்தியாசமான நடத்தையை கண்டு அதிர்ந்து போன மணப்பெண், இவரை எப்படி திருமணம் செய்து கொள்வது என கூறி குடும்பத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேடையிலேயே அறிவிப்பு
பின்னர் மின்னலை கண்டு இப்படி பயப்படும் நபரை திருமணம் செய்து கொள்ள முடியாது என மேடையிலேயே அறிவித்தார் அந்த பெண். இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
3 பேர் கைது
அப்போது மணமகனின் குடும்பத்தாரை மணமகள் குடும்பத்தார் தாக்கினர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்னலை கண்டு பயந்த மணமகனை வேண்டாம் என மணமகள் உதறி தள்ளிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.