பத்மஸ்ரீ விருது வாங்கிய ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்... படிப்பு 3ம் வகுப்பு மட்டுமே!
புவனேஷ்வர்: இனிப்புக் கடை ஒன்றில் பாத்திரம் கழுவுபவராக, மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒடிசாவைச் சேர்ந்த பிரபல கவிஞர் ஹால்டர் நாக், நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
ஒடிசாவைச் சேர்ந்த பிரபலக் கவிஞர் ஹால்டர் நாக். கோஸ்லி மொழியில் ஏராளமான கவிதைகளையும், 20க்கும் மேற்பட்ட காவியங்களையும் இவர் இயற்றியுள்ளார். இவரைப் பற்றி ஐந்து மாணவர்கள் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஒடிசா இலக்கியத்தில் இவரது பங்களிப்பு அதிகம்.
இவரைப் பற்றியும், இவரது வாழ்க்கையைப் பற்றியும் பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. சம்பால்பூர் பல்கலைக்கழகம் இவரது படைப்புகளை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வைத்துள்ளது.
படிக்காத மேதை...
இவ்வளவு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஹால்டர் படித்தது வெறும் மூன்றாம் வகுப்பு தான் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். பார்ப்பதற்கும், பழகுவதற்கும்கூட மிகவும் எளிமையானவர் ஹால்டர்.
எளிமையானவர்...
எப்போதும் வேட்டியும், பனியனும் மட்டுமே அணிந்து, கழுத்தில் துண்டுடன் காட்சி தரும் ஹால்டர், இதுவரை காலில் செருப்பு அணிந்ததே இல்லை. ஆனால், தினந்தோறும் மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை பாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் இவர்.
பாதியில் நின்ற கல்வி...
கடந்த 1950ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள பர்கார் மாவட்டத்திலுள்ள கென்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் தான் ஹால்டர். தந்தையை இழந்ததால், மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஹெல்டருக்கு ஏற்பட்டது.
படிப்படியாக உயர்வு...
அதனைத் தொடர்ந்து இனிப்புக் கடை ஒன்றில் பாத்திரம் கழுவும் பணியில் சேர்ந்தார் அவர். அதனைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 16 ஆண்டுகள் சமையல்காரராக பணிபுரிந்தார். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த ஹெல்டர் பின்னர், பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடை ஒன்றை சொந்தமாகத் தொடங்கினார்.
கவிதை ஆர்வம்..
கடந்த 1990ம் ஆண்டு தான், இவர் தனது முதல் கவிதையான ‘தோடோ பர்காச்' என்ற கவிதையை இயற்றினார். அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கவிதைகள் இயற்றுவதில் ஹெல்டருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
பிரபலக் கவிதைகள்...
தற்போது உலகம் முழுவதும் இவரது கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவரது கவிதையின் கருப்பொருட்கள் சமூகம், அரசியல், அறிவியல் என கலவையாக இருக்கும்.
பத்மஸ்ரீ விருது...
இந்நிலையில், கடந்த திங்களன்று குடியரசுத்தலைவர் கையால், நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார் ஹால்டர். இவரைப் பிரபல ஒடிசா கவிஞர் கங்காதர் மெஹருக்கு இணையாகப் புகழ்பவர்களும் உண்டு.