பீர் குடிக்க வந்த நல்ல பாம்பு.. கேனுக்குள் தலை மாட்டிக்கொண்ட பரிதாபம்.. குடிகாரர்கள் அட்டூழியம்
Recommended Video
புவனேஸ்வர்: குடித்துவிட்டு போடும் பிளாஸ்டிக் பாலித்தீன்கள் மட்டுமல்ல, குடித்துவிட்டு போடும் பீர் பாட்டில்களும் வன உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.
நமது ஊர் பகுதிகளில் வனப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது என்றால் ஒரு குவிட்டர் மற்றும் பீர் பாட்டில்களுடன் குடித்து கும்மாளம் போட இளைஞர் பட்டாளம் கிளம்பும். குடிக்க குளிக்க என்று இவர்கள் ஜாலியாக இருந்துவிட்டு அப்படியே கொண்டுபோகும் பாலிதீன் கப்புகள் மற்றும் பாட்டில்களை அங்கேயே வீசி சென்றுவிடுவார்கள்.
இப்படி தினசரி வீசிச் செல்லும் பாட்டில்களும், பாலித்தீன் கப்புகளும் மலைப்போல் கிடக்கின்றன. நம்மூர் மலைப்பகுதிகளில்.. மலைப்பகுதி என்று அல்ல.. காட்டுப் பகுதிகளிலும் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
உயிரை பற்றி கவலையில்லை
இவை அந்த பகுதிகளில் உள்ள வனஉயிரினங்களை எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பதை சிறிது கவலைப்படுவதில்லை. அவர்களின் உடல் நலம் குறித்தே அக்கறைப்படாதவர்கள், விலங்குகளின் உயிர்கள் பற்றியா கவலைப்பட போகிறார்கள்.
ஒடிசாவில் குடிகார கும்பல்
சரி விஷயத்துக்கு வந்திடுவோம்.. இப்படி ஆதங்கப்பட காரணம் ஒடிசாவில் நடந்த ஒரு சம்பவம் தான். ஒடிசாவின் மயூர்பான்ஜி அருகே பரிபடா வனப்பகுதியில் நேற்று குடித்துவிட்ட சென்ற ஒரு கும்பல் பீர் கேனை அங்கேயே வீசி சென்று இருக்கிறது,
|
பீர் பாட்டிலில் மாட்டிய தலை
இது என்ன புதுவாசனை என்று விறுவிறுவென ஊர்ந்து வந்த நல்ல பாம்பு நேராக பீர் கேனுக்குள் தலையை விட்டுருக்கிறது. ஆனால் உள்ளே சென்ற தலையை நல்ல பாம்பால் வெளியே எடுக்க முடியவில்லை. திணறியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது.
வனத்தில் விடுவிப்பு
இதை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் பத்திரமாக பாம்பை பீர் கேனில் இருந்து விடுவித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விடுவித்தனர். இந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.