துப்பாக்கியை சுத்தம் செய்த போது தோட்டா வெடித்து கமாண்டோ வீரர் பலி.. பெண் எஸ்.ஐ. காயம்..
பெங்களூரு: கூட்லு சி.டி.சி, மையத்தில், கைக் துப்பாக்கியை ஏட்டு ஒருவர் சுத்தம் செய்த போது, தோட்டா பாய்ந்து மற்றொரு ஏட்டு பலியானார். பெண் எஸ்.ஐ., காயமடைந்தார்.
கடந்த, 2 ம் தேதி காலை, சி.டி.சி., - மத்திய பயங்கரவாத தடுப்பு மற்றும் கே.எஸ்.ஆர்.பி.., - கர்நாடகா மாநில தொழிற்சாலை பாதுகாப்பு படை ஏட்டுகள் பயிற்சி முடித்து, கூட்லு சி.டிசி., மையத்துக்கு பேருந்துகளில் வந்தனர். பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன், கமாண்டோ ராஜசேகர், தன் கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தார்.
அப்போது, தவறுதலாக துப்பாக்கியின் விசையில் கை பட்டு தோட்டா வெடித்தது. சீறிய தோட்டா அருகிலிருந்த, கமாண்டோ மகாதேவசாமி, என்பவரின் தொடை பகுதியில் தோட்டா புகுந்து, வெளியேறியது.
அத்துடன், மகாதேவசாமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் எஸ்.ஐ., மஞ்சுளாவையும் தோட்டா துளைத்தது. இதில் மகாதேவசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மஞ்சுளா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உள் அமைப்பு பாதுகாப்பு பிரிவு, ஏ.டி.ஜி.பி., அமர்குமார் பாண்டே கூறுகையில், ''பொதுவாகவே பயிற்சி முடிந்து, சி.சி.டி., மையத்துக்குள் நுழையும், சி.டி.சி., மற்றும் கே.எஸ்.ஆர்.பி., வீரர்கள், துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களை அகற்றி, உறுதி செய்த பின், துப்பாக்கிகளை ஒப்படைப்பது வழக்கம்.
துப்பாக்கியை சுத்தம் செய்த போது தான், எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது," என்றார்.
கமாண்டோ ராஜசேகர் மீது, கொலை குற்றமாக பதிவு செய்யாமல், கவனக்குறைவாக ஆயுதத்தை கையாண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.