2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிகைகாரங்க-திரிணாமுல் எம்பி மொய்த்ராவின் திமிர் பேச்சால் சர்ச்சை
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, 2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிகையாளர்கள் என திமிராக பேசிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் கயேஸ்பூரில் ஞாயிற்றுக்கிழமை திரிணாமுல் காங். கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் மஹூவா மொய்த்ராவும் பங்கேற்றார்.
2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை
இந்த நிகழ்ச்சிக்கு உள்ளூர் பத்திரிகையாளர்களும் சென்றிருந்தனர். அப்போது, 2 பைசாவுக்கு பிரயோஜனமே இல்லாத பத்திரிகையாளர்களை யார் உள்ளே விட்டது? ஒவ்வொருத்தரும் டிவியில் முகத்தை காட்டனும், பேப்பரில் போட்டோ வரனும்னு இருக்கீங்க என திமிராக பேசினார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொய்த்ராவுக்கு கண்டனம்
மஹூவா மொய்த்ராவின் இந்த ஆணவப் பேச்சுக்கு கொல்கத்தா பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே 1945-லேயே உருவாக்கப்பட்டதுதான் கொல்கத்தா பிரஸ் கிளப். இதேபோல் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் மொய்த்ராவின் பேச்சை கடுமையாக எதிர்த்துள்ளன.
மொய்த்ரா புறக்கணிப்பு
மஹூவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. சில பெங்காலி மொழி சேனல்கள், மொய்த்ராவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளன.
சொந்த கருத்து- திரிணாமுல்
இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மஹூவா மொய்த்ராவின் கருத்து சொந்த கருத்து என ஒதுங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பஞ்சாயத்து அமைச்சர் சுபத்ரா முகர்ஜி, பத்திரிகைகளுடன் நல்லுறவையே திரிணாமுல் காங்கிரஸ் விரும்புகிறது; மொய்த்ராவின் கருத்து அவருடைய கருத்து மட்டுமே என்றார்.