13 ஆண்டுகளுக்கு பிறகும் தீராத ஜாதி வெறி:கலப்பு திருமணம் செய்த ஜோடி அடித்துக்கொலை.. கதக்கில் பயங்கரம்
கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்த ஜோடியை 13 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்த ஜோடியை 13 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முலகுந்தாவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி. அருகில் உள்ள பசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமவ்வா. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர்.
இவர்கள் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் தவித்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு கிளம்பினர்.
மங்களூரில் வசித்தனர்
இதைத்தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மங்களூருவில் வசித்து வந்தனர்.
சொந்த கிராமம்
அப்போது சோமவ்வா தனது பெயரை அமினபி என்று மாற்றிக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், மொஹரம் பண்டிகையை கொண்டாடுவதற்காக முலகுந்தா கிராமத்துக்கு அஷ்ரப் அலி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்தார்.
வழிமறித்த சகோதரர்
கணவர் வீட்டிற்கு வந்த சோமவ்வாவுக்கு அருகில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று உறவினர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசையை கணவரிடம் கூறியுள்ளார் சோமவ்வா. காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அஷ்ரப், நேற்று காலையில் தனது மனைவி சோமவ்வாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பசாபுரா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வழிமறித்த சகோதரர்
13 ஆண்டுகளுக்கு பிறகு உறவுகளை சந்திக்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் புறப்பட்டார் சோமவ்வா. பசாபுரா கிராமத்தை அடைந்த நிலையில் சோமவ்வாவின் சகோதரர் தேவப்பா அவர்களை வழிமறித்தார்.
கீழே விழுந்த தம்பதி
அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரின் தலையிலும் இரும்புகம்பியால் தாக்கினார். இதில், நிலைக்குலைந்து அஷ்ரப் அலி, சோமவ்வா ஆகியோர் கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிளும் சாலையில் விழுந்தது.
துடிதுடித்து பலி
இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் தேவப்பா கொடூரமாக இரும்புக்கம்பியால் தொடர்ந்து தாக்கினார். இதனால் அஷ்ரப் அலி, சோமவ்வா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
போலீஸில் சரண்
இதைத்தொடர்ந்து, இடத்தை காலி செய்த தேவப்பா, சிரஹட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியை ஒப்படைத்த தேவப்பாவை போலீசார் கைது செய்தனர்.
பெரும் பரபரப்பு
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அஷ்ரப்அலி-சோமவ்வாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலப்பு திருமணம் செய்த பெண் 13 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த கிராமத்துக்கு வந்தபோது கணவருடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.