தாயின் இறுதி சடங்குக்கு வரமறுப்பு.. அஸ்தியை கூரியரில் அனுப்புமாறு போனில் கூறிய பாசக்கார மகள்
மகாராஷ்டிராவில் தாயின் இறுதிச்சடங்குக்கு வரமறுத்த மகள் அஸ்தியை கூரியரில் அனுப்புமாறு பக்கத்து வீட்டாரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் தாயின் இறுதிச்சடங்குக்கு வரமறுத்த மகள் அஸ்தியை கூரியரில் அனுப்புமாறு பக்கத்து வீட்டாரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் மனோர், டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான திராஜ் பட்டேல்.
திராஜ் பட்டேல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
இவரது மனைவி நிருபென். 65 வயதான நிருபென் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆமதாபாத்தில் வசிக்கும் நிருபெனின் ஒரே மகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இறுதிச்சடங்கிற்கு வரமுடியாது
அப்போது மகள் கொடுத்த பதில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அதாவது, அவர் தனக்கு அதிக வேலைகள் இருப்பதால் தாயின் இறுதி சடங்கிற்கு வரமுடியாது என கூறினார்.
மனம் உடைந்த அக்கம்பக்கத்தினர்
மகள் இறுதி சடங்கிற்கு வர முடியாது என கூறியதால் மனைவியின் உடலை எப்படி தகனம் செய்வது என பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை திராஜ் தவித்தார். அதை பார்த்து மனம் உடைந்த அக்கம் பக்கத்தினர் நிருபெனின் உடலை அவர்களே தகனம் செய்துவிட முடிவு செய்தனர்.
இந்துமுறைப்படி தகனம்
அவர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் நிருபெனின் உடலை தூக்கி சென்று இந்து முறைப்படி தகனம் செய்தனர்.
அஸ்தியை கூரியரில் அனுப்புங்கள்
இதையடுத்து அக்கம் பக்கத்தினர், தாயின் அஸ்தியை வந்து வாங்கி செல்லுமாறு உயிரிழந்த பெண்ணின் மகளை தொடர்பு கொண்டு கூறினர். அப்போது அவர், தாயின் அஸ்தியை கூரியரில் அனுப்பும்படி கூறியது பக்கத்து வீட்டுக்காரர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கவலையடைந்த மக்கள்
ஆமதாபாத்தில் இருந்து பால்கர் வர 7 மணி நேரம் கூட ஆகாது. இறந்த தனது தாய்க்காக 7 மணி நேரம் கூட செலவு செய்யாத மகளை நினைத்து அப்பகுதி மக்கள் பெரும் கவலை தெரிவித்தனர்.
அக்கம்பக்கத்தினர் இறுதிச்சடங்கு
பார்சி சமூக பெண்ணின் இறுதி சடங்கிற்கு மகள் கூட வரமறுத்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரது உடலை தகனம் செய்து எல்லா சடங்குகளையும் செய்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இப்படியும் ஒரு பெண்ணா?
வெளிநாட்டில் இருக்கும் மகனோ அல்லது மகளோ வரும் வரை காத்திருந்து இறந்து போன உறவினர்களின் உடல் இறுதிச்சடங்கு செய்யப்படும் சம்பவங்களை கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாநிலத்தில் இருந்து கொண்டு பெற்ற தாயின் இறப்புக்கு மகள் வராமல் அஸ்தியை கூரியரில் அனுப்ப சொன்ன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.