காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு!
ஜம்மு காஷ்மீர் நிலைமையை பார்வையிடவும், அங்கு இருக்கும் மக்களிடம் பேசவும் நாளை எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர்: காங்கிரஸ் தலைமையில் நாளை 14க்கும் மேற்பட்ட எதிர் கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் நிலைமையை பார்வையிடவும், அங்கு இருக்கும் மக்களிடம் பேசவும் திட்டமிட்டு நாளை எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இதனால் தற்போது காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
முக்கியமான அரசியல் தலைவர்கள் எல்லோரும் அங்கு இப்போதும் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்னும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த தலைவர்களை விடுவிக்க கோரி திமுக சார்பாக நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 13 எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அஹமது மீர் ஆகியோர் காஷ்மீர் மக்களை சந்திக்க கடந்த மாதம் ஸ்ரீநகர் சென்றனர். ஆனால் அவர்கள் ஸ்ரீநகர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருந்தே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அரசு கடுமையான அடக்கு முறைகளை செய்கிறது என்று விமர்சித்து இருந்தார். இதனால் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், ராகுல் காந்தியை காஷ்மீரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். நீங்கள் வந்து காஷ்மீரை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அவரின் அழைப்பை ஏற்று தற்போது எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் செல்ல இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் அடங்கிய எதிர்க்கட்சிகள் குழு நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறது. காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தலைவர்கள் காஷ்மீர் செல்கின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கம்யூனிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி, திமுக எம்பி திருச்சி சிவா, டி.ராஜா ஆகியோர் காஷ்மீர் செல்கின்றனர்.
9 எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சித் தலைவர்களின் இந்த திடீர் முடிவு மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.