சீன அதிபரை வரவேற்கும் விழாவில் அழையாமல் 'நுழைந்த' விருந்தாளியால் பரபரப்பு!
டெல்லி: ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு இந்திய குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்த நேரத்தில் குறுக்கே புகுந்து ஓடிய நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய நாட்டில் தெரு நாய் தொல்லைக்கு ஒரு அளவே கிடையாது. எத்தனை பாதுகாப்பு மிகுந்த பகுதியாக இருந்தால் அத்தனை பாதுகாப்பு வளையத்தையும் தகர்த்தெறிந்து உள்ளே செல்லும் அளவில்லாத ஆற்றல் (!) நாய்க்கு உள்ளது. சட்டசபை, நாடாளுமன்ற வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்புக்கு நடுவேயும் நாய்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும்.
அதுபோன்ற நிகழ்வுதான் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நிகழ்ந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள சீன அதிபர் ஜின்பிங், இன்று பிரணாப் முகர்ஜியை சந்திக்க ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு குதிரைபடை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க தயாராக இருந்தனர்.
இந்த அமர்க்களங்களால் அரண்டு போன தெருநாய் ஒன்று, நாலு கால் பாய்ச்சலில் அவ்வழியாக ஓடியது. இதை பத்திரிகைகாரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் மக்கள், சீனாவில் நாய்க்கறி பிரபலம் என்பதால் சீனரை பார்த்ததும் தப்பியோடுகிறது என்றும், நமது நாட்டு பாதுகாப்பு லட்சணம் அவ்வளவுதான் என்றும் ஆளுக்கொரு கருத்தாக தட்டி விட்டுக் கொண்டுள்ளனர்.
இதைப்பார்க்கும் உங்களுக்கு என்ன கருத்து தோன்றுகிறது?