என்ன இப்படி ஆகிப்போச்சு.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு கொலையை ஒப்புக் கொண்ட 'டான்'
பஞ்சாப்பில் கொல்லப்பட்ட விபின் சர்மா என்ற நபரை தான்தான் கொன்றேன் என சாரஜ் சாந்து என்ற நபர் பேஸ்புக்கில் பகிரக்கமாக தெரிவித்து இருக்கிறார்.
அமிர்ததரஸ்: விபின் சர்மா என்ற நபர் சில நாட்களுக்கு முன் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கில் போலீசார் சாரஜ் சாந்து என்ற ரவுடியை தேடி வந்தது.
12 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என போலீசார் தீவிரமாக தேடியும் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. மேலும் அவருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்ட அவரது நண்பரையும் போலீசார் தேடி வந்தனர்.
போலீசால் தீவிரமாக தேடப்பட்டு வரும் சாரஜ் சாந்து தற்போது தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்.
விபின் சர்மா கொடூரமாக கொலை
கடந்த அக்டோபர் 30ம் தேதி அமிர்ததரசின் முக்கியமான கடை வீதியில் வைத்து விபின் சர்மா என்ற நபர் கொல்லப்பட்டார். இரண்டு நபர் ஒன்றாக சேர்ந்து விபின் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பைக்கில் தப்பி சென்றனர். அவரது உடலில் மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்து இருந்தது. இந்த நிலையில் கொல்லப்பட்ட விபின் சர்மா 'சங்கர்ஷ் சேனா' என்ற இந்துத்துவா கட்சியில் இருந்ததால் ஏதாவது தீவிரவாதியால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
தப்பி ஓடிய சாரஜ் சாந்து
இந்த கொலையை தீவிரமாக விசாரித்த போலீஸ் அங்கு இருந்த சிசிடிவி கேமரா ஒன்றின் பதிவுகளை சோதனை செய்தது. அதன்படி அந்த கொலையை செய்தது உள்ளூர் ரவுடி சாரஜ் சாந்து என்று கண்டுபிடித்தது. அவரின் நண்பரின் முகம் அடையாள காணப்பட முடியவில்லை. இதையடுத்து கடந்த 12 நாட்களாக போலீசார் சாரஜ் சாந்து மற்றும் அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலை ஒப்புக் கொண்டார்
போலீசார் சாரஜ் சாந்துவை தேடி வரும் அதே சமயத்தில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தைரியமாக போஸ்ட் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த போஸ்ட் மூலம் தான்தான் விபின் சர்மாவை கொலை செய்தது என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். மேலும் என்னுடைய செயலுக்கு யாரும் மத சாயம் பூச வேண்டாம் எனவும் அவர் சாரஜ் சாந்து தனது போஸ்ட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பழிக்கு பழி வாங்கினேன்
இந்த போஸ்டில் தன்னுடன் இருந்த நண்பன் யார் என்பதை சாரஜ் சாந்து வெளியிடுவதை தவிர்த்துவிட்டார். ஆனால் அந்த நண்பனின் அப்பாவை சில நாட்களுக்கு முன் விபின் சர்மா கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கொலைக்கு பழிவாங்கவே இப்போது விபின் சர்மா கொல்லப்பட்டுள்ளதாக எழுதி இருக்கிறார். இவர் இவ்வளவு தைரியமாக போஸ்ட் எழுதியும் போலீசார் இவரது இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.