சிவகாசியில் அச்சான கள்ள நோட்டுக்கள்.... கேரளாவில் புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது
திருவனந்தபுரம்: சிவகாசியில் அச்சடிக்கப்படும் 1000 ரூபாய் கள்ளநோட்டுக்களை கேரள மாநிலத்தில் புழக்கத்தில் விட்ட 7 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதைதொடர்ந்து கள்ள நோட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பிரதீப், 26 என்பவர் ஆற்றிங்கல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
திருவனந்தபுரம் சாக்கை பகுதியை சேர்ந்த அகில் என்பவரிடம் நான் ரூ.2 லட்சம் கடன் கேட்டேன். அதற்கு ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டார். எனக்கு கடன் கொடுக்க எனது காரை அடமானமாக தரும்படி அகில் கூறினார். இதனால் நான் எனது காரில் அவர்கள் கூறியபடி ஆற்றிங்கல் சென்றேன். அப்போது வினோத் முன்னிலையில் அகில் என்னிடம் ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்தார்.
அதை நான் சரிபார்த்தபோது அதில் கள்ள நோட்டுகள் கலந்து இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி நான் கேட்டபோது அகிலும், வினோத்தும் என்னை தாக்கி விட்டு எனது காரை பறித்து சென்றுவிட்டனர் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி அகிலையும், வினோத்தையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 78 லட்சம் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும். மேலும் 2 கார்கள், லேப்-டாப் கம்ப்யூட்டர்கள், கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய பிரிண்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அகில், வினோத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பிரதீப்பும் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை பகுதியை சேர்ந்த பாலையா, 45என்பவரிடம் இருந்து பிரதீப் கள்ள நோட்டுகளை வாங்கி கேரளாவில் புழக்கத்தில் விட்டு வந்துள்ளார்.
மேலும் நாளடைவில் பிரதீப்பும், சனல்குமார் என்பவரும் சேர்ந்து கள்ள நோட்டை தயாரிக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பிரதீப்புக்கும், அகில், வினோத்துக்கும் ஏற்பட்ட மோதலில் தற்போது இவர்கள் அனைவரும் போலீசில் சிக்கி உள்ளனர். மேலும் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த அன்சார், 38, சபீர்,32, தனுக்குமார், 45, பாலையா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கள்ள நோட்டு கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகாசியில் உள்ள அச்சகங்களில் 1000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் அதனை செங்கோட்டை எல்லை வழியாக கேரளா மாநிலத்திற்குள் புழக்கத்தில் விடுவதாக தெரிவித்தனர். 30000 ரூபாய்க்கு ரூ. 1 லட்சம் கள்ள நோட்டுக்களை விற்பனை செய்வதாகவும் அந்த கும்பல் தெரிவித்தது.
எளிதில் பணக்காரனாக விரும்பும் மக்களை குறிவைக்கும் கள்ளநோட்டு கும்பல், முதலில் சில நல்ல ரூபாய் நோட்டுக்களை இனாமாக கொடுத்து செலவு செய்ய சொல்வார்களாம். பின்னர் மொத்தமாக பணத்தை வாங்கிக்கொண்டு தரமில்லாத கள்ள நோட்டுக்களை கொடுத்து விடுவார்களாம். இந்த நோட்டுக்களை எளிதில் கள்ளநோட்டுக்கள் என்று கண்டு பிடித்து விடலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.