ஜார்கண்டிலும் ஒரு புராரி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை.. கிராம மக்கள் சோகம்!
ஜார்கண்டில் கடன் பிரச்சனையால் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி: ஜார்கண்டில் தீராத கடன் பிரச்சனையால் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டெல்லி புராரி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்ம மரணமடைந்தனர். அவர்கள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
7 பேர் தற்கொலை
இந்நிலையில் ஜார்கண்டிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி 2 குழந்தைகள்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தீபக் குமார் ஜா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர்களுடன் தீபக் குமாரின் பெற்றோர், மற்றும் சகோதரர் ரூபேஷ் ஜா ஆகியோர் வசித்து வந்தனர்.
கடன்காரர்கள் நச்சரிப்பு
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தீபக், சொந்த தொழில் துவங்க வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், பெரும் கடன்சுமை காரணமாக அது நடக்கவில்லை. கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு நச்சரிக்க தொடங்கினர்.
தற்கொலை முடிவு
போதுமான வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்ட தீபக் குமார், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். தனக்கு பிறகு கடன்காரர்கள் தனது குடும்பத்தை தொல்லை செய்வார்கள் என்று எண்ணிய் தீபக் குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
7 பேர் தற்கொலை
இந்நிலையில் தீபக் தனது மனைவி, குழந்தைகள், சகோதரர், பெற்றோருடன் , அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தீபக், அவரது சகோதரர் ரூபேசும், மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
போலீஸ் விசாரணை
குடும்பத்தினர் படுக்கை அறையில் சடலமாக கிடந்தனர். அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் சோகம்
டெல்லி புராரி மரண அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.