மகளின் திருமணத்திற்காக 860 மரங்களை வெட்டி விற்ற தந்தை.. வினோத தண்டனை வழங்கிய வனத்துறை
பத்லாபூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் தனது மகளின் திருமண செலவுகளுக்காக, சொந்த நிலத்தில் இருந்த மரங்களை தங்கள் அனுமதியின்றி வெட்டி விற்ற ஒருவருக்கு வனத்துறை வினோத தண்டனை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகேயுள்ள பத்லாபூர் என்ற பகுதியில் வசிக்கும் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த மனிதர் தஸ்ரத். இவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். திருமணம் நெருங்க நெருங்க தஸ்ரத்திற்கு கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தஸ்ரத்திற்கு அவரது வீட்டின் அருகே கொஞ்சம் நிலம் இருக்கிறது. இதனையடுத்து அந்த நிலத்தில் உள்ள மரங்களை விற்று, திருமண செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ள தீர்மானித்தார். மேலும் விழாவிற்கு வருபவர்களை பந்தல் அமைத்து அங்கே வைத்து உபசரிக்கவும் திட்டமிட்டார்.
இதனையடுத்து தனது வீட்டின் அருகேயுள்ள நிலத்தில் உள்ள சுமார் 860 மரங்களை வெட்டி விற்கும் பணிகளில் இறங்கினார். 2 நாட்களில் தனது நிலத்தில் இருந்த பெரும்பாலான மரங்களை வெட்டி விற்று காசாக்கியுள்ளார். இதனை வைத்து திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், வழக்கு பதிவு செய்து தஸ்ரத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். இதன் பின்னர் மரங்களை வெட்டிய தள்ளிய அதே நிலத்தில், அடுத்த வரும் 4 மாதத்துக்குள் வெட்டப்பட்ட மரங்களின் அளவை விட 2 மடங்கு மரங்களை நட வேண்டும் என வினோத தண்டனையை வழங்கி உத்தரவிட்டனர். அப்படி நடாவிட்டால் அந்த புதிய மரங்களுக்கான தொகையை வனத்துறையிடம் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கேரளாவில் நிபா காய்ச்சல் பீதி... தமிழகத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஊர் மக்கள் திருமண செலவுகளுக்காகவும், தாராள இடம் வேண்டும் என்பதற்காகவும் தஸ்ரத் தனது சொந்த நிலத்தில் உள்ள மரங்களை தான் வெட்டியுள்ளார். அவரது நிலத்திற்கு அருகே வனத்துறைக்கு சொந்தமான இடம் சிறிதளவே உள்ளது. ஆனால் வனத்துறையினர் தேவையின்றி தஸ்ரத் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி ஒருவர், நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் தகவலை அறிந்த எங்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதற்குள்ளாகவே பெரும்பான்மையான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. வெட்டப்பட்ட மரங்களில் பல மரங்கள் மிகவும் இளமையானவை.
இதனையடுத்து நில உரிமையாளர் தஸ்ரத் மீது, மகாராஷ்டிராவின் மரங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1964-ன் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தஸ்ரத் குடும்பத்தினர் ஒரே திருமண மண்டபத்தில் இரண்டு திருமணங்களை நடத்த திட்டமிட்டதாகவும், அதற்காக அவர்களுக்கு அதிகபணம் தேவைப்பட்டதால் மரங்களை வெட்டி பணம் ஏற்பாடு செய்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் வனத்துறையின் தண்டனையால் சோகமாக உள்ள தஸ்ரத் குடும்பத்தினர், சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் தங்கள் இல்லத்தில் திருமண நிகழ்வு முதல்முறையாக நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கான பணம் எங்களிடம் இல்லாததால் தான், மரங்களை வெட்டி அதனை விற்று திருமண ஏற்பாடுகளை செய்தோம்.
மரங்களை வெட்டுவது தவறு என்பது கூட எங்களுக்கு தெரியாது. தவறுக்காக தண்டித்து கொள்ளுங்கள், ஆனால் ஏழைகளாகிய எங்களால் நீங்கள் கேட்கும் தொகையை தரவோ அல்லது வெட்டிய மரங்களுக்கு ஈடாக இரு மடங்கு மரக்கன்றுகளை வாஙகி நடவோ வசதி இல்லை என வேதனையுடன் கூறியுள்ளனர்.