பாலியல் தொழிலாளியிடம் பெற்ற மகளை விற்ற குடிகார தந்தை..பணம் கிடைக்காததால் போலீஸில் புகார்!
பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற தந்தையே தனது 14 வயது மகளை விலை மாதுவிடம் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற தந்தையே தனது 14 வயது மகளை பாலியல் தொழிலாளியிடம் விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரயலகுடா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணாவுக்கு பாலியல் தொழில் செய்து வரும் சுதாராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குடிக்க பணம் இல்லாததால் திண்டாடிய கிருஷ்ணா தனது மகளை பாலியல் தொழிலாளியான சுதாராணியிடம் விற்க விலை பேசியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சுதாராணி கடந்த மாதம் சிறுமியை வாங்கிக்கொண்டு முன்பணமாக 3000 ரூபாய் கொடுத்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை
மீதி பணத்தை தனது வாடிக்கையாளர்களிடம் வாங்கித் தருவதாக சுதாராணி வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் கூறியபடி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.
2 வாரங்களாக காரில்..
இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுடன் கடந்த 2 வாரங்களாக சிறுமியை காரில் வைத்துக்கொண்டே சுதாராணி சுற்றிவந்துள்ளார். அப்போது கிருஷ்ணா பணம் கேட்டதால் கொடுக்க மறுத்த அவர்கள் கிருஷ்ணாவை காரில் இருந்து இறக்கி விட்டதாக தெரிகிறது.
மகளை கடத்தியதாக புகார்
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக கூறி போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் கிருஷ்ணா மாவட்டத்தில் வைத்து சுதாராணியை கைது செய்து சிறுமியை மீட்டனர்.
தந்தை உட்பட 3 பேர் கைது
மேலும் சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுமி நலகொண்டா பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.