சினிமாவாகிறது சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம்... இயக்கம் ராம்கோபால் வர்மா!
மும்பை : மர்மங்கள் நிறைந்த சுனந்தாவின் மரணத்தை விறுவிறுப்பான திரைப்படமாக எடுக்க தயாராகி விட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் கடந்தாண்டு டெல்லி ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப் பட்டார். சுனந்தா இறப்பதற்கு முன், அவருக்கும் சசிதரூருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்தது. சசிதரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹருக்கும் இடையே தொடர்பிருப்பதாக சுனந்தாவே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
எனவே, சுனந்தாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது.
கொலை வழக்கு...
விஷம் காரணமாக சுனந்தாவின் மரணம் ஏற்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓராண்டிற்குப் பிறகு சுனந்தா கொலை செய்யப் பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
விசாரணை...
சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர், தன்னை ரிப்போர்ட்டை மாற்றிக் கொடுக்கச் சொன்னதாக பரபரப்பு புகார் அளித்தார். எனவே, இதில் அரசியல் தலையீடு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. சுனந்தாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரைப்படமாகிறது...
இந்நிலையில், பல்வேறு மர்மக்களை தன்னகத்தே கொண்ட சுனந்தாவின் மரணத்தை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
விரைவில் அறிவிப்பு...
இதற்காக சுனந்தா குறித்த தகவல்களை அவர் திரட்டி வருகிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ரத்த சரித்திரம்...
ஏற்கனவே, இவர் மும்பை ஓட்டலில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை மையமாக வைத்து ‘அட்டாக் ஆப் 26/11' என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அதேபோல், போலீஸ் என்கவுன்டரில் இறந்த தாதாக்களின் உண்மை கதையையும் ‘ரத்த சரித்திரம்' என்ற பெயரில் படமாக எடுத்தார்.
பரபரப்பு...
சுனந்தாவின் மரணம் தொடர்பாக சசிதரூரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சுனந்தாவின் கதையை ராம்கோபால் வர்மா படமாக எடுக்க முடிவெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுமுகங்கள்..?
ராம்கோபால் வர்மாவின் இப்புதிய படத்தில் சசிதரூர் மற்றும் சுனந்தா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் ராம்கோபால் வர்மா, அனுபவம் வாய்ந்த நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறாரா அல்லது புதுமுகங்களை நடிக்க வைக்கப் போகிறாரா என்பது படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு பின் தெரிய வரும்.