பெண்களுக்காக முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவர்... கேரளத்தில் நெகிழ்ச்சி... குவியும் பாராட்டுகள்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளத்தில் தத்தளிப்போரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் பெண்கள் உயர்வான படகுகளில் ஏறுவதற்கு தனது முதுகை காட்டி அவர்களை சுமந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளத்தில் மழை பெய்தது. இதனால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் உள்ளனர். அவர்கள் எங்கெல்லாம் வெளியேற முடியாத வெள்ளத்தில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என தத்தளித்து வருகின்றனரோ அவர்களை கண்டறிந்து மீட்டு வருகின்றனர்.
இது போல் தானாக முன்வந்து உதவும் மீனவர்கள், தன்னார்வல அமைப்புகளை சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜெய்சல் என்ற 30 வயது மீனவ இளைஞர் பெண்களுக்காக தனது முதுகை படிக்கட்டாக மாற்றிய தருணம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இவர் தனூர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள பெண்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து சற்று யோசிக்காமல் ஜெய்சல் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றினார்.
இதையடுத்து சிறிய தயக்கத்துடன் ஏறிய பெண்களை சும்மா ஏறுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். ஜெய்சலின் செயல்களை பொதுமக்களும் சக மீட்பு குழுவினருடன் பாராட்டி வருகின்றனர்.