சூதுகவ்வும் ஸ்டைலில் பேங்கை கொள்ளையடிக்க பள்ளி நடத்திய இளைஞர்.. ரூ. 1.04 கோடி கொள்ளை!
வங்கிகளைக் கொள்ளையடிப்பது குறித்து பள்ளி நடத்திய இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா : பீகாரில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்காக வங்கிகளைக் கொள்ளையடிப்பது எப்படி என்ற பள்ளியை நடத்தி, ரூ. 1.04 கோடியை கொள்ளையடித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரை சேர்ந்த 26 வயது இயற்பியல் பட்டதாரி பங்கஜ் சஹானி. வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த இவர், தனது பணத்தேவைகளுக்காக வங்கிகளைக் கொள்ளையடிப்பது எனத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2010, 2012ம் ஆண்டுகளில் ரூ. 1.04 கோடியை ஏடிஎம் மூலம் கொள்ளையடித்துள்ளார்.
பீகார் மட்டுமின்றி ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் நேபாளத்திலும் கூட ஏடிஎம் கொள்ளையில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருடுவது பற்றி பாடம்:
வங்கி மற்றும் ஏடிஎம்களை கொள்ளையடிப்பதில் கை தேர்ந்த திருடனான பங்கஜ், தான் கற்ற திருட்டுக் கலையை வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த மேலும் சில இளைஞர்களுக்கு கற்றுத்தர விரும்பியுள்ளார். இதற்காக பள்ளி ஒன்றைத் தொடங்கிய அவர், இதுவரை 55க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, எப்படி வங்கிகளில் கொள்ளை அடிப்பது, ஏமாற்றி கடன் வாங்குவது, ஏடிஎம் கொள்ளை அடிப்பது போன்றவற்றை கற்றுத் தரும் பள்ளிக்கூடத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தத் தொடங்கியுள்ளார்.
விசாரணை:
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பங்கஜைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை ஏடிஎம் மூலம் கொள்ளை அடித்த பணம் எவ்வளவு என்பது தனக்கே தெரியவில்லை என பங்கஜ் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரூ. 1.04 கோடி பணத்தை பங்கஜ் கொள்ளையடித்திருப்பார் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பங்கஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இது ஒருபுறம் இருக்க, பங்கஜின் திருட்டு மாணவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களால் இந்தியாவின் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிர்ச்சி:
சூது கவ்வும் படத்தில் நான்கு இளைஞர்களுக்கு கொள்ளையடிப்பது எப்படி என விஜய் சேதுபதி வகுப்பெடுப்பாது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். தற்போது அதே ஸ்டைலில் இளைஞர்களுக்கு கொள்ளையடிப்பது குறித்து பள்ளி நடத்தி இளைஞர் ஒருவர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.