கேதார்நாத் வெள்ளத்தில் காணாமல் போன சிறுமி.. 5 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைந்த தருணம்!
Recommended Video
அலிகார்: கடந்த 2013-ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தின்போது காணாமல் போன 12 வயது சிறுமி தற்போது 5 ஆண்டுகள் கழித்து அவர் குடும்பத்தினருடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
2013-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பெரு வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரகாண்டில் உள்ள புனித தலங்களான பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
அவ்வாறு கடந்த 2013-ஆம் ஆண்டு இமயமலையில் உள்ள பனிஆறுகள் உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அடுக்கு மாடிக் கட்டடங்கள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்தன.
மனைவி
இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் அலிகார் மாவட்டம் பன்னாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், அவரது மனைவி ஷீமா. மகள் சஞ்சல் (12) ஆகிய மூவரும் கேதார்நாத் சுற்றுலா சென்றனர்.
தாய் வீடு திரும்பினார்
அப்போது ராஜேஷ் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். ஷீமா சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிவிட்டார். ஆனால் இவர்களுடன் சென்ற மகள் சஞ்சல் வீடு திரும்பவே இல்லை. அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் இறந்திருக்கக் கூடும் என அவரது உறவினர்கள் நினைத்துவிட்டனர்.
காப்பகம் நிர்வாகம்
இதனிடையே வெள்ள நீரில் தத்தளித்த அந்த சிறுமியை யாரோ சிலர் காப்பாற்றி ஜம்முவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த சிறுமி அலிகார் நகரம் குறித்து அவளுக்கு தெரிந்த சில வார்த்தைகளில் தேடியதை காப்பக நிர்வாகத்தினர் கவனித்தனர்.
மகிழ்ச்சி
இதையடுத்து அலிகார் நகர் எம்எல்ஏ மூலம் உதவி கேட்டு சஞ்சல் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதனால் சஞ்சல் மட்டுமல்ல குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு 17 வயதாகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தன் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.