தயிர் வடை சாப்பிட்டிருப்பீங்க.. "இந்த" வடையை பார்த்திருக்கிறீர்களா?
பெங்களூரு- சென்னை சதாப்தி ரயிலில் நீதிபதிக்கு வழங்கப்பட்ட வடையில் முடி இருந்தது குறித்து ஐஆர்சிடிசிக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார்.
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வரும் சகாப்தி விரைவு ரயிலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்பட்ட வடையில் முடி இருந்தது குறித்து ஐஆர்சிடிசிக்கு அவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்த சதாப்தி எக்ஸ்பிபஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் பயணித்த பெட்டியில் பயணிகளுக்கு ரயில்வே கேண்டீனில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது.
அப்போது நீதிபதிக்கு வழங்கப்பட்ட உணவு பாக்கெட்டை பிரித்து உணவு அருந்த தொடங்கினார். வடையை பிய்த்து சாப்பிட முற்பட்ட போது அதில் முடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த வடையை தன் போனில் படம் எடுத்துக் கொண்டார் நீதிபதி. ஐஆர்சிடிசியில் கொடுக்கப்படும் கருத்துக் கேட்டல் படிவம் (ஃபீட்பேக் ஃபார்ம்) உணவின் தரம் என்ற பகுதியில், மிக மோசம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவு தயாரிப்பு, உணவை பாக்கெட் செய்யும் போது அதில் ஈடுபடும் பணியாளர்கள் தலை மற்றும் கைகளில் உறைகளை அணிவதை ஐஆர்சிடிசி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.
மத்திய கணக்கு மற்றும் தணிக்கைக் குழு எனப்படும் சிஏஜி ரயில்களில் சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமில்லை என்றும் போர்வைகள் தூய்மையாக இல்லை என்றும் அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.