என்ன அவார்டா கொடுக்குறாங்க.. நோயாளி போல நடித்த 410 பேர்.. நிஜ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்கள்!
மத்திய பிரதேசத்தில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் 410 பேர் போலியாக நோயாளி போல நடித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
போபால்: மத்திய பிரதேசத்தில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் 410 பேர் போலியாக நோயாளி போல நடித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ நிர்வாகமே இந்த மோசமான செயலை செய்து இருப்பதாக தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த 410 பேருக்கும் மருத்துவமனை அங்கு நோயாளி போல நடிக்க பணம் கொடுத்து உள்ளது.
இந்த மோசமான செயலை செய்ததற்கு பின் மிக முக்கியமான காரணம் இருப்பது தெரிய வந்து உள்ளது. தற்போது அந்த மருத்துவமனை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ஆய்வு
அகில இந்திய மருத்துவ கவுன்சில் சில நாட்களுக்கு முன் போபாலில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டது. அந்த மருத்துவமனையிலும், அதற்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் இந்த சோதனை நடந்தது. அப்போது அங்கு சில நோயாளிகள் பொய்யாக நடிப்பதாக கவுன்சிலுக்கு சந்தேகம் வந்தது. மொத்தமாக 400க்கும் அதிகமான நோயாளிகள் உண்மையில் நோயாளிகளே இல்லை என்று கவுன்சில் கருதி இருக்கிறது.
நீதிமன்றம் ஆணை
மருத்துவ கவுன்சில் இதையடுத்து அந்த மருத்துவமனை மீது வழக்கு தொடுத்தது. நீதிமன்றம் சிபிஐயை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவரையும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இருவரையயும் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி, இந்த விஷயத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த சில நாட்களாக அந்த மருத்துவமனையிலும், கல்லூரியிலும் தீவிரமாக சோதனையும், விசாரணையும் நடந்தது. இதில் 410 பேர் பொய்யாக நோயாளியாக் நடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரணம் என்ன
மருத்துவமனையின் இந்த செயலுக்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. மருத்துவமனைக்கு சொந்தமான அந்த கல்லூரிக்கு, நிறைய மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வாங்கவே இப்படி செய்யப்பட்டு இருக்கிறது. நிறைய நோயாளிகள் என்று கணக்கு காட்டினால் நிறைய மருத்துவ சீட்கள் வாங்க முடியும் என்று இவ்வளவு மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறது.
சோதனை நடக்கும்
தற்போது நீதிமன்றம் இந்த விஷயத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த கல்லூரியிலும் மருத்துவமனையிலும் இன்னும் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை, அங்கு வேலை பார்ப்பவர்களின் விவரம், ஆசிரியர்களின் பின்புலம் என அனைத்தும் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த தகவல்களை சேகரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த குழுவிற்கு நீதிமன்றம் ஆணையிட்டு இருக்கிறது.