சிக்கனா? மட்டன் தான் வேணும்.. மணமகள் வீட்டார் அடம்.. பந்தியில் மோதல்.. பறந்த நாற்காலிகள்
Recommended Video
கோதாகுடம்:தெலுங்கானாவில் திருமண விழாவில் மட்டனுக்கு பதில் சிக்கன் பறிமாறியதால் மணமகன், மணகள் வீட்டார் உறவினர்கள் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணத்தை நடத்தி பார்.. வீட்டை கட்டி பார்... என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. தற்போதைய கால கட்டத்தில் பல கஷ்டங்களுக்கு பிறகு திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
அப்படியும்... பல திருமணங்கள் வெற்றியாக முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்படுகின்றன. வரதட்சனை கொடுமை, போதிய கல்வியறிவு இல்லாதது என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால்... விருந்தில் மட்டனுக்கு பதில் சிக்கன் பரிமாறப்பட்டதால் ஒரு திருமண பந்தியே களேபரமானது.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் பூர்கம்பாடு மண்டலம் உப்புசாகா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரவீன் அஜ்மீரா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது.
உணவுக்கு ஏற்பாடு
திருமணத்திற்கு பிறகு பந்தல் அமைக்கப்பட்டு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மணமகன் வீட்டாரிடம் போதிய பணம் இல்லாததால் மட்டன் கறிக்கு பதில் சிக்கன் கறி விருந்தில் வைக்கப்பட்டிருந்தது.
மட்டன் கறி
அதற்கு மணமகள் தரப்பில் இருந்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. மட்டன் கறி வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து சாப்பாடு பந்தியில் திரும்ப, திரும்ப கேட்டதாக தெரகிறது.
கடும் வாக்குவாதம்
ஒரு கட்டத்தில் அவர்களின் நச்சரிப்பை பொறுத்துக் கொள்ள முடியாத நிலை உருவானது. அதனால், மணமகள் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சண்டை, மோதல்
நேரம் செல்ல.. செல்ல வாக்குவாதம் முற்றி அடுத்தக்கட்டத்துக்கு சென்றது. இரு தரப்பினரும் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். சாப்பாட்டு பந்தியிலே இரு வீட்டாரும் மோதிக் கொண்டனர்.
|
பறந்த நாற்காலிகள்
100க்கும் மேற்பட்ட நாற்காலிகள் பறந்தன. சாப்பாடு மேஜைகள் தூக்கி வீசப்பட்டன. பந்தியில் இருந்தவர்களும்... காத்திருந்தவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
படுகாயம், சிகிச்சை
பின்னர் கைகலப்பாக மாறியது. மோதலில் 8 பேர் படுகாயம் அடைய... மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை
புகார்களை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியின் விருந்தில் மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.