நடுவானில் அடித்துக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள்.. லைசென்ஸ் ரத்து!
நடுவானில் பறந்துகொண்டிருந்த போது சண்டை போட்டுக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
Recommended Video
மும்பை: நடுவானில் பறந்துகொண்டிருந்த போது சண்டை போட்டுக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை லண்டனில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 324 பயணிகளுடன் மும்பை வந்தது. அப்போது விமானத்தை மூத்த விமானி ஒருவர் இயக்கினார்.
அவருடன் பெண் விமானியும் இருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பெண் விமானிக்கு பளார்
வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த தகராறில் பெண் விமானியை அந்த மூத்த விமானி அறைந்ததாகக் கூறப்படுகிறது.
கண்ணீருடன் வெளியேறிய பெண்
இதையடுத்து விமான ஓட்டி அறையில் இருந்து உடனடியாக அப்பெண் கண்ணீருடன் வெளியேறினார். பின்னர் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு மீண்டும் விமானி அறைக்கு சென்றுள்ளார்.
நிர்வாகத்திடம் புகார்
அதற்கு அடுத்த சில மணிநேரத்தில் விமானம் மும்பை வந்தடைந்தது. அப்போது இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விமானி ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
விசாரணை நடத்த உத்தரவு
இந்த விவகாரம் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்துமாறு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
பணியாற்ற தடை
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட விமானிகள் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான உரிமம் ரத்து
மேலும் அவர்களின் உரிமத்தை ரத்து செய்தும் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடுவானில் பைலட்டுகள் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.